ஆசிய ஹாக்கி போட்டி.. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா

Aadmika
Aug 13, 2023,09:52 AM IST
சென்னை : ஆசிய சாம்பியஷிப் டிராபி ஹாக்கி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் 3 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12 வரை சென்னையில் நடைபெற்று வந்தன. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய 6 அணிகள் மோதின. லீக் சுற்று போட்டிகளில் தாங்கள் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் டிராவையும் பதிவு செய்தது இந்திய அணி.



லீக் சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி, பைனலுக்கு சென்றது. இந்நிலையில் ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டியின் பைனல் நேற்று நடைபெற்றது. இதில் மலேசிய அணியை, இந்தியா எதிர்கொண்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு பெற்றது இந்தியா.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய ஹாக்கி சாம்பியன் சட்டத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பையை இந்தியா வெல்லது இது நான்காவது முறையாகும்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் மிகச் சிறந்த வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். இது நமக்கு 4வது வெற்றியாகும். ஓய்வில்லாத தியாகம், அர்ப்பணிப்பு, கடும் பயிற்சி, சிறந்த நோக்கம் ஆகியவற்றை நமது வீரர்கள் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.  அவர்களது அசாதாரண விளையாட்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.  நமது வீரர்கள் எதிர்காலத்திலும் இதுபோன்ற பெரும் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.