சம்மர் வந்தாச்சு.. புழுக்கமும் ஓவரா இருக்கு.. விற்பனைக்குக் குவியும் தர்பூஸ், இளநீர்!

Su.tha Arivalagan
Apr 03, 2023,05:32 PM IST

சென்னை: கோடைகாலம் நெருங்கி விட்டது. இப்போதே பல ஊர்களில்வெயில் வெளுக்கஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் தர்பூஸ், இளநீர் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அதேசமயம்,விலையும் அதிகமாக இருக்கிறது.


சென்னையில் வெயிலின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. பகல் முழுவதும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. மாலைக்கு மேல்தான் சற்று காற்று நன்றாக வீசுகிறது. வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதே நிலைதான். இதனால் இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் போன்றவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது, விற்பனையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் விலையும் அதிகமாகவே இருக்கிறது.


சென்னை கோயம்பேடுப மார்க்கெட்டுக்கு தர்பூஸ் உள்ளிட்டவற்றின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் இடையில் இதில் குறைவு காணப்பட்டாலும் தற்போது மீண்டும் வருகை அதிகரித்துள்ளது. வருகையை விட தேவை அதிகம் இருப்பதால் விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது.


வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களின் வருகையும் கூட தற்போது அதிகரித்துள்ளதாம்.  வழக்கமான விலையை விட 10 சதவீத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. வெயில் காலத்தில் நீர்க்காய்களை அதிகமாக மக்கள் வாங்குவார்கள். எனவே இதன் விலையும் அதிகரித்துள்ளது. அதேசமயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றின் விலை பெரிதாக உயரவில்லை.


வரும் நாட்களில் வெயில் அதிகரிக்க அதிகரிக்க இந்த காய்கறிகள், பழங்களின் விலையும் உயரும் என்று வியாபாரிகள் சொல்கிறார்கள்.  இதற்கிடையே, சென்னையில் சாலையோரங்களில் தர்பூஸ் குவிந்து காணப்படும் காட்சிகள் அதிகரித்து வருகன்றன. வெயிலுக்கு இதமாக தர்பூஸ்தான் அதிகம் சாப்பிடுவார்கள். கூடவே இளநீர் விற்பனையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.