தொடர்ந்து பெய்யும் மழை.. வெள்ளக்காடான புதுச்சேரி.. பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Meenakshi
Jan 08, 2024,11:44 AM IST

புதுச்சேரி: தொடர் மழை காரணமாக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழையின் தாக்கம் இந்த ஆண்டு சற்று அதிகமாகவே உள்ளது. மழையினால் பாதிப்பும்  அதிகம். முன்னர் பெய்த மழையின் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீளவில்லை. இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் மழை பெய்து வருகிறது. 




புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகர் முழுவதும் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பாகூர், காலப்பட்டி, தவளக்குப்பம் , அரியாக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 




இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.  கனமழையால் நகர பகுதிகளின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பொதுப்பணி துறை அதிகாரிகள் சாலைகளில் இருக்கும் வெள்ள நீரை அகற்றும்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பிற்பகல் வரை மழை பெய்யும்




புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணி வரை  மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


அதேபோல புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.