அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்., 15 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Su.tha Arivalagan
Apr 01, 2024,02:03 PM IST

சென்னை: டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை சிறையில்  அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து,  உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த விவகாரத்தில் தலையிட டெல்லி உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. 




இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா? என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும். பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநரோ அல்லது குடியரசு தலைவரோ தான் முடிவு செய்ய வேண்டும். 


டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்  அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இன்று நடந்த விசாரணையில், கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கெஜ்ரிவாலை வைக்க உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.