ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டியுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு

Meenakshi
May 27, 2024,06:16 PM IST

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மனு தாக்கல் செய்துள்ளார். 


டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.  இவ்வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  தெலுங்கானா எம்.எல்.சி.யான கவிதாவும் கைது செய்யப்பட்டார். இவர்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவாலும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லி முதல்வர் ஜாமீன் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




அவரது ஜாமீன் மனு மீதான  விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்  திபாங்கர் தத்தா அமர்வு  விசாரித்தது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். மேலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் அனுமது வழங்கப்பட்டது. ஆனால் அரசு விவகாரத்தில் தலையிடவோ அல்லது முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும், தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்து முடிவடைந்த பின்னர் ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


இதையடுத்து ஜாமீனில் வெளி வந்த முதல்வர் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25ம் தேதி டெல்லியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.


தேர்தலில் கெஜ்ரிவால் தனது மனைவி, மகன், மற்றும் தந்தையுடன் வந்து வாக்களித்தார். தற்போது டெல்லியில் தேர்தல் முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமீனும் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ காரணங்களுக்காக மேலும் ஏழு நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க  கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.