கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தெடர்வார்.. டெல்லி ஹைகோர்ட்.. ஈடி காவலும் ஏப். 1 வரை நீட்டிப்பு!

Meenakshi
Mar 28, 2024,07:17 PM IST

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். மறுபக்கம் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1ம் தேதி வரைக்கும் டெல்லி கோர்ட் நீட்டித்துள்ளது.


டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ஆம் தேதி கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும் உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட டெல்லி உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. 




இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா? என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும். பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநரோ அல்லது குடியரசு தலைவரோ தான் முடிவு செய்ய வேண்டும். 


டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 


இந்த நிலையில் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.