கண் போன்ற காதலுக்கு, திருமண "மை".. இட்டால் அழகு!!

Hamridha
Dec 31, 2022,10:04 PM IST
முன் பின் அறிமுகம் இல்லா நபர்கள், எப்படி பெற்றோர் ஏற்பாடு  செய்த காரணத்தினால் திருமணத்திற்கு
  ஒப்புக்கொள்கிறார்கள் என்பது சிலருக்கு சந்தேகமாக தான் இருக்கிறது... அதே போல் அறிமுகம் இல்லா 
நபர்கள் எப்படி புதிதாக பழகிய சிறு காலத்திற்குள் காதல் வயப்படுகிறார்கள் என்பதும் சிலருக்கு ஆச்சரியம் தருகிறது.. 

இரு உயிர்களின் கூடுதல்தான் காதல்.. இரு மனங்களின் காதலைக் கொண்டாடத்தானே  திருமணமும் 
சடங்குங்களும் பிறந்தது.. திருமணம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. காதல் இயற்கையானது.. 
உணர்வுகளில் உறைந்து இருப்பது.. பருவம் வந்ததும், பளிச்சிடும்.

ஆண், பெண்ணின் உணர்வுகள் ஒன்றிப் போகும்போது அது காதலாகிறது.. கல்யாணத்திற்கு முன்பு 
அது நடந்தாலும் காதல்தான்.. கல்யாணத்திற்குப் பின்னர் நடந்தாலும்.. அதுவும் காதல்தான்.. காதலையும் 
திருமணத்தையும் வெவ்வேறாக ஏன் பார்க்கிறீர்கள், அது தேவையில்லை.. காதலும் ஒரு அன்பின் வெளிப்பாடு.. 
அதை எல்லோரும் உணர்கிறோம்.. சிலர் திருமணத்திற்கு முன்பு, பலர் திருமணத்திற்குப் பின்னர்.

அறிமுகம் இல்லாமல் திருமணம் ஆன,  நம் தாத்தாவை எப்பொழுதும் திட்டிக்கொண்டிருக்கும் பாட்டிக்கும், 
பாட்டியின் பொறுமையை சோதிக்க வாம்பிழுக்கும் தாத்தாவுக்கும் இடையே  கூட காதல் இருக்கத்தான் செய்கிறது... பக்கத்தில் அமர்ந்து ஐந்து  நிமிடம் பேச நேரம் கிடைக்காமல் குழந்தைகளுக்காக ஓடி கொண்டிருக்கும்  அம்மா அப்பாஇடையிலும் கூட அதே காதல்தான் மெல்லிழையாக ஓடிக் கொண்டிருக்கிறது. காற்றை விட்டு நீங்காத பூமி போலத்தான்..காதல் கலந்த வாழ்க்கையும்.


பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்  திருமணத்திற்கு முன்னரே காதல் உணர்வு சுவைத்து.. அந்த அனுபவத்தையும் அக மகிழ்ச்சியுடன் அனுபவித்து.. திருமணத்தில் பயணிப்பவரும் உள்ளர்.. இயல்பான காதலில் மூழ்கி..அதைத் திருமணத்தில் கொண்டு போய் முடிப்பவர்களும் உள்ளனர்.. எப்படி ஆயினும் காதல் இருக்கத்தான் செய்கிறது.. இரு உள்ளங்களின் பந்தத்தின் அடிப்படை.. காதல் மட்டுமே.

நம்மை பெற்றவர்களை தவிர எல்லோரையுமே அறிமுகம் இல்லாமல் புதிதாக  பழகி தானே உறவுகளை உணர்கிறோம்.. அந்த "உணர்வு".. தான் காதல்.. அதே போல் தான் காதலும்.. காதல் இல்லாத திருமணத்தில் அர்த்தம் இல்லை.. அடடா காதலிக்காமல் போய் விட்டோமே.. என்று வருத்தம் தேவையில்லை.. அமைந்த உறவுடன் ஆழமாக பழகி, மனதைப் புரிந்து, உணர்வுகளை உணர்ந்து, சிந்தை தெளிந்து காதல் கொள்ளுங்கள் எந்நாளும்..!