ஆம்ஸ்ட்ராங் கொலை.. ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில் எங்கே?.. வளைத்துப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!

Manjula Devi
Jul 20, 2024,07:35 PM IST

சென்னை:   பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்திலை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய கொலை தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. 




ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கை எழுந்தது.  இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட உடனையே 11 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் விசாரணை செய்கையில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பலியாகவே இந்த சம்பவம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை போலீசார் ஐந்து நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.


இதன் பின்னர் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் அருள், அவரது சகோதரி மகன் சதிஷ், முன்னாள் அதிமுக பிரமுகர் மலர்க்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை சென்னை ஓட்டேரி அருகே தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அஞ்சலையை தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 15 பேரில் திருவேங்கடம் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதால் போலீசார் என்கவுண்டர் செய்தனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கொலையில் ஸ்கெட்ச் போட்டு திட்டமிட்டுத் தந்தவர் சம்போ செந்தில் எனப்படும் சம்பவம் செந்தில்தான் முக்கியமானவர் என்று தெரிய வந்துள்ளதாம். இவர் வக்கீலாக இருந்தவராம்.


முக்கிய குற்றவாளியாக தேடப்படும் சம்போ செந்திலை பிடிக்க  ஐந்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஐந்து தனிப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்போ செந்திலுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடிதான் அவரது சொந்த ஊர் என்பதால் அங்கும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.