ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. கைதான 11 பேரையும் .. கான்பரன்ஸ் கால் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போலீஸ்!

Manjula Devi
Jul 11, 2024,11:29 AM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் கான்பரன்ஸ் கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி அனுமதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி பெரம்பூரில் பத்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் தொடர்பாக பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என ஆம்ஸ்ட்ராங்  ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார்  மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையீடு செய்திருந்தனர்.


இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.