ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை .. உத்தரவிட்டுள்ளேன்.. முதல்வர் மு க ஸ்டாலின்

Manjula Devi
Jul 06, 2024,05:34 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52. இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல்  ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் கீழே விழுந்த அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அந்த மர்ம கும்பலை பிடிக்க ஆர்ம்ஸ்டிராங்கின் நண்பர்கள் முயன்றும் அவர்களால் முடியவில்லை. இதில் அவருடைய நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 


பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பித்து ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்ஸ்ட்ராங்கையும், காயமடைந்த அவரது நண்பர்களையும், மீட்டு  அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.




தகவல் அறிந்து போலீசார் உடனே விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்த சிசிடிவி காட்சி  வெளியானது. இதனையடுத்து பத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் திருப்புமுனையாக நேற்று எட்டு பேர் சரணடைந்துள்ளனர். கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,, பகுஜன் சமாஜ்  கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது.


அவரது உறவினர் நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் கண்டனம் - இரங்கல்


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப்  பேரிழப்பாகும். 


ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.