வறட்சிக்கு வித்திடுகின்றனவா.. சீமை கருவேல மரங்கள்.. விவசாயிகளுக்கு வரமா சாபமா?

Su.tha Arivalagan
May 21, 2024,12:50 PM IST

- பொன் லட்சுமி


தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் சீமைகருவேல மரத்தை அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது .. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..


ஆனால் பல விவசாயிகள் இந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றார்கள். ஒரு பக்கம் சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், மறு பக்கம் விவசாயிகளுக்கு பலன் தரும் மரமாகவும் உள்ளது. இந்த சீமை கருவேல மரங்கள் வரமா சாபமா என்று பார்ப்போம் வாருங்கள்..




தமிழ்நாட்டில் இந்த மரங்களை பார்க்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தொலைதூர சாலை வழிப் பயணங்களின் போது அதிகமாக கண்ணில் படக் கூடியவை இம்மரங்கள் தான்.. அது மட்டுமல்லாமல் பராமரிப்பு இல்லாத ஆறுகள் ஏரிகளின் அருகிலும் அதிகமாக வளரக்கூடியதும்  இந்த மரங்கள் தான்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் பண்ண முடியும் என்ற நிலை இருக்கிறது.. இந்நிலையில் பருவமழை ஏமாற்றம் அளித்ததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.


ஆனால் மற்றொரு பக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சிக்கு முக்கிய காரணம் சீமைக் கருவேல மரங்களே என்கின்றனர் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள். 


எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை இந்த  சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு.  பருவமழை இல்லாமல் போனாலும்  கூட நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்ளும் தன்மை இந்த மரத்திற்கு உண்டு என்பதனால் இதனை  பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில்   ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டு வந்து தூவப்பட்டது... ஆனால் இன்று இதுவே விவசாயிகளுக்கு தீராத தலைவலியாக மாறிவிட்டது...


காலப்போக்கில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருளாக இதன் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட இந்த சீமைக் கருவேல மரங்களால்  விவசாயம் செய்வது பெருமளவு குறைந்துவிட்டது... அதனால் விளை நிலங்களிலும், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும் செழித்து வளர்ந்துள்ளது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்கிறது... இந்த மரங்களுக்கு உரம் எதுவும் தேவையில்லை என்பதால் தானாகவே கண்மாய், ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது... ஆடு மாடுகளுக்கு இதன் காய்கள் உணவாகவும் பயன்படுகிறது.


இந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டும் இல்லாமல் சுற்றி உள்ள நதி, ஏரி, குளம் ஆகியவற்றிலிருந்தும் நீரை எடுத்துக்கொள்கிறது. அது மட்டுமல்லாமல்  மண்ணின் வளத்தையும் சேர்த்தே எடுத்துக்கொள்கிறது... இதன் விளைவால்  நம் நாட்டின் விவசாய நிலத்தின் பெரும் பாகம் குறைந்துள்ளது. இதனால் பலவிவசாயிகள் தங்கள் வாழ்கைக்கு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.


பருவ மழை பொய்த்து போனதால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாய தொழிலை கைவிட்ட விவசாயிகள், விவசாயத்தை விட்டு விட்டு  கரிமூட்டம் போடும் தொழிலை  செய்ய தொடங்கினார்கள் . இப்பகுதியில் கரிமூட்டம் தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொழிலிலும் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது...  காலை முதல் மாலை வரை தொடர்ந்து புகையில் இருப்பதால்  சுவாச கோளாறு  இருமல், டிபி போன்ற நோய்களும் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கரிமூட்டம் மீது ஏறும் போது கவனக் குறைவாக இருந்தால் ஆளை உள்ளே இழுத்து விடும். இதனால் தீயில் சிக்கி  பல விபத்து ஏற்பட்டிருக்கிறது பல  பெண்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள்.


எனவே இந்த கரிமூட்டம் தொழிலுக்கு மாற்றாக பனை தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.. இந்தப் பகுதியில் லட்சக்கணக்கில் பனை மரங்கள் இருக்கின்றன.. இந்த பனை மரங்களை மறுசீராய்வு செய்து அதிலிருந்து கிடைக்கும் பனை பொருட்களை வைத்து மாற்று தொழில் செய்யலாம்... இதற்கு அரசாங்கம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


ஒரு பக்கம் இந்த மரத்தினால் பல இடையூறுகள் வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த மரங்களை வெட்டி அடுப்பு கரிக்கும் விறகு எரிப்பதற்கும் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மரங்களை வெட்டினால் அதற்கு மாற்றாக என்ன வகையான மரங்களை நடலாம் என்ற எண்ணம் இருக்கிறது... ஏனென்றால் இந்த மரம் எவ்வளவு வறட்சியையும் தாங்க கூடியது. அதேசமயம் அடுப்புக்கரி, கரிமூட்டம்  தொழில் செய்பவர்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்தது.. எனவே இதற்கு மாற்றாக வறட்சியை  தாங்க கூடிய அதே சமயம் அடுப்புக்கரிக்கும் கரி மூட்டத்திற்கும் தேவையான விறகுகளை  தரும் மரங்களை நட வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளார்கள்.


அதேபோல  சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல  விதமான  நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்தாவரமுமான மஞ்சநெத்தி  என்னும் மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால் இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்களால் விதையிட்டு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை அது  தானாக முளைத்து பசுமையாக  வளரக்கூடியது. அது மட்டுமல்லாமல் இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.




இன்று பல இடங்களில் ஆறுகள் ஏரிகளை சுற்றி  இந்த கருவேல மரங்கள்  சூழ்ந்துள்ளதால் நாளை அந்த இடமே பாலைவனமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.. எனவே இந்த கருவேலமரம் அழிக்கும் திட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் என்று பலர் கைகோர்த்துள்ளனர். இன்று நமக்கு தண்ணீர் இருக்கிறது... இருக்கும் தண்ணீரை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால்  நாளை வரப்போகும்  சமூகத்திற்கு எப்படி தண்ணீர் சேமித்து வைக்க போகிறோம்.


நம் வருங்கால சந்ததிகளுக்கு காசு, பணம், இடம் சேர்த்து வைப்பது எல்லாம் சரிதான்... ஆனால் உண்ண உணவும், குடிக்க நீரும் சேர்த்து வைக்காமல் போவது நியாயமா எனவே ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள் பொதுமக்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர்கள் ஊர்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றினாலே போதும். நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம்.