இந்தியாவின் 2வது ஆப்பிள் ஸ்டோர்.. டெல்லியில் தொடங்கி வைத்தார் டிம் குக்

Su.tha Arivalagan
Apr 20, 2023,12:55 PM IST
டெல்லி:  டெல்லியில் இந்தியாவின் 2வது ஆப்பிள் விற்பனையகத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக்.

டெல்லியின் செலக்ட் ஸ்கைவாக் வளாகத்தில் இந்த புதிய ஆப்பிள் ஸ்டோர்  தொடங்கப்பட்டுள்ளது.  ஆப்பிள் கடை திறப்பையடுத்து அதிகாலை முதலே அங்கு வாடிக்கையாளர்கள் வந்து குவியத் தொடங்கி விட்டனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்துக் கிடந்தனர். 

ஆப்பிள் தலைமை  செயலதிகாரி டிம் குக் இந்த ஸ்டோரை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை வரவேற்றார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.



இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் செவ்வாய்க்கிழமை மும்பையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது தலைநகர் டெல்லியில் 2வது கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி வந்த டிம் குக், நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரை விட டெல்லி கடை சிறியதுதான்.  டெல்லி விற்பனையகத்தில் ஒரு சிறப்பு உள்ளது. இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மொத்தமாக 15 மொழிகளை பேசக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்தியாவின் முக்கிய மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக இந்த வித்தியாசமான நடவடிக்கையாம்.

உலக அளவில் செல்போன் விற்பனையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. விற்பனை மட்டுமல்லாமல், பயன்படுத்துவோரும் இங்குதான் அதிகம். எனவே இந்திய மார்க்கெட் ஆப்பிள் ஐபோனுக்கு முக்கியமானது. இதனால்தான் இங்கேயே வந்து அது கடை திறக்கிறது.

டிம் குக் இந்தியாவுக்கு வருவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2016ம் ஆம்டு அவர் வந்துள்ளார். அதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வந்துள்ளார்.