சினிமாவா இது.. பாலிவுட்டிலிருந்து வெளியேறினார் இயக்குநர் - நடிகர் அனுராக் காஷ்யப்!

Su.tha Arivalagan
Mar 06, 2025,05:09 PM IST


மும்பை: பாலிவுட்டை விட்டும், மும்பை நகரை விட்டும் வெளியேறியுள்ளார் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப். பாலிவுட் சினிமா மிகவும் டாக்ஸிக் ஆக மாறி விட்டதாக  அவர் விமர்சித்துள்ளார். தற்போது பெங்களூரில் அவர் குடியேறியுள்ளார்.


இந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர்தான் அனுராக் காஷ்யப்.  பான்ச், பிளாக் பிரைடே, நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆப் ஹனுமான், மும்பை கட்டிங், கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே டாக்கீஸ் என பல படங்களை இயக்கியவர் இதில் பிளாக் பிரைடே பல விருதுகளை அள்ளிக் குவித்த படமாகும்.


சமீப காலமாக தென்னிந்தியப் படங்களில் அதிகம் நடிக்கிறார் அனுராக் காஷ்யப். குறிப்பாக தமிழில் பல படங்களில் இவரைக் காண முடிகிறது. அதேபோல தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அனுராக் காஷ்யப்.


இந்த நிலையில் பாலிவுட்டை விட்டு வெளியேறியுள்ளார் காஷ்யப். தனது இருப்பிடத்தையும் பெங்களூருக்கு மாற்றி விட்டார். பெங்களூரில் ஒரு பிளாட்டைப் பிடித்து அங்கு குடியேறியுள்ளார். 




இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாலிவுட் ரொம்ப மோசமாகி விட்டது. டாக்ஸிக்கான துறையாக மாறியுள்ளது பாலிவுட். இங்கு 500 கோடி, 800 கோடி என்று படங்களை நம்பர்களுக்கு மாற்றி விட்டனர். இங்கு கிரியேட்டிவிட்டிக்கு இடமே இல்லை. அதற்கான சுதந்திரமே இல்லை.  முடியாத இலக்கை நோக்கி அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து நான் விலகியிருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.


இனி தென்னிந்திய படங்களில் அதிக அளவில் நடிக்க அனுராக் காஷ்யப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமா மீது மிகுந்த காதல் கொண்டவர் அனுராக். முன்பு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு தென்னிந்திய இயக்குநர்களைப் பார்க்கவே பொறாமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


அனுராக் காஷ்யப் டெகாய்ட் என்ற இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் மிருனாள் தாக்கூர், அத்வி சேஷ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.