உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!

Su.tha Arivalagan
Apr 19, 2025,04:30 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள இரண்டு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அலிகாரில், மகளுக்குப் பார்த்து வைத்திருந்த  பையனுடன் அப்பெண்ணின் தாயார் காதல் கொண்டு ஓடிப் போனார். இந்த நிலையில் படாவன் என்ற நகரில், மகளின் மாமனாருடன், அப்பெண்ணின் தாயார் ஓடிப் போன விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


இந்த இரு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளன. அலிகாரைச் சேர்ந்தவர் சப்னா தேவி. இவர் தனது மகளுக்குப் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையான ராகுல் என்பவருடன் காதல் கொண்டு கல்யாணத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் அவர்களை பீகாரில் வைத்து போலீஸார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். 


தனது மகளும், கணவரும் தன்னை மன ரீதியாக மிகவும் துன்புறுத்தி வந்ததால்தான் வெறுத்துப் போய் ராகுலுடன் ஓடி விட்டேன். அவருடனான உறவு எனக்கு மன நிம்மதியைக் கொடுத்துள்ளது. இப்போதுதான் அமைதி திரும்பியுள்ளது. அவருடன்தான் வாழப் போகிறேன் என்று கூறியுள்ளார் சப்னா தேவி.


இந்த சம்பவம் ஒரு பக்கம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் தற்போது அதே உத்தரப் பிரதேசத்தில் படாவன் என்ற நகரில் மகளின் மாமனாருடன் ஒரு பெண் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




அந்தப் பெண்ணின் பெயர் மமதா. சைலேந்திரா என்ற பில்லு என்பவருடன் இவர் வீட்டை விட்டு போய் விட்டார். மமதாவின் சம்பந்திதான் பில்லு. அதாவது மகளின் மாமனார். மமதாவுக்கு 43 வயதாகிறது. பில்லுவுக்கு 46 வயதாகிறது.


மமதாவின் கணவர் பெயர் சுனில் குமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மாதம் 2 முறைதான் வீட்டுக்கு வருவாராம். இந்த நிலையில் வீட்டில் கணவர் இல்லாத சமயங்களில் பில்லுவை வரவழைத்து அவருடன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார் மமதா.  பில்லு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தனது பிள்ளைகளை அடுத்த அறைக்குப் போய் விடுமாறு கூறி விடுவாராம்.


இந்த உறவு குறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் பில்லுவும், மமதாவும் உறவைக் கைவிடத் தயாராக இல்லை. எனவே வீட்டை விட்டு போய் விட்டனர்.


மமதாவுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு மகளுக்குத்தான் கல்யாணம் ஆகியுள்ளது. 2022ல் இந்த கல்யாணம் நடந்தது. அப்போது முதலே பில்லுவுடன் அவருக்கு உறவு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.


வழக்கமாக பில்லு இரவில்தான் வருவாராம். அதிகாலையில் கிளம்பிப் போய் விடுவாராம். தற்போது பில்லு - மமதா குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுனில் குமார்.  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.