அமெரிக்காவில் சோகம்.. அடுத்தடுத்து விமான விபத்து.. குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
Feb 01, 2025,12:48 PM IST
வாஷிங்டன்: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மோதி விபத்திற்கு உள்ளானதில் 67 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நடந்துள்ளது. இதில் ஆறு பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்திற்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் இருந்த மூன்று ராணுவ வீரர்கள் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் உட்பட மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப் படுத்துள்ள அமெரிக்க அரசு இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியிலிருந்து புறப்பட்ட லியர்ஜெட் 55 என்ற சிறிய ரக விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் வந்து
கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து விபத்திற்கு உள்ளானது.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விமானம் குடியிருப்பு பகுதிகள் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் மோதியதில் வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து எறிந்தன. விமானத்தில் இருந்த ஆறு பயணிகள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்