அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது ரெமல் புயல்.. கன மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
May 24, 2024,10:18 AM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நாளை ரெமல் புயல் உருவாக உள்ள நிலையில், அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.




இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறிய நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றது. இதனைதொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்தப் புயல் வரும் ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்க கடற்கரையில் தீவிர புயலாகவே  கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  


இன்று  கனமழை:


நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யக்கூடும். இன்று 88 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 117 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச கூடும். இது தவிர புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கேரளா கடற்கரை ஒட்டி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி மேலும் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள்  இல்லை என கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமா.. அல்லது கலைந்து செல்லுமா.. என்ற தகவல் இதுவரை  வெளியாகவில்லை.