கோவை விமான நிலையத்துக்கு.. மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை

Su.tha Arivalagan
Jun 24, 2024,10:38 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று கோயம்பத்தூர் விமான நிலையம். தினசரி ஆயிரக்கணக்கானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இ மெயில் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால்  போலீஸாரின் சோதனையில் இது புரளி என்று தெரிய வந்தது.




இருப்பினும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதையடுத்து வதந்தி என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.


இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுவும் இ மெயில் மூலம் வந்துள்ளது. இதையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் விமான நிலையம் முழுமையாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.


வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையம் பரபரப்பானது. இருப்பினும் தற்போது இந்த மிரட்டலும் புரளி என்று தெரியவந்துள்ளது.