மீண்டும் ஒரு பெருந்தொற்று வரப் போகிறது.. தவிர்க்க முடியாது.. எச்சரிக்கிறார் இங்கிலாந்து விஞ்ஞானி

Su.tha Arivalagan
May 29, 2024,05:55 PM IST

லண்டன்: கொரோனாவைப் போன்ற ஒரு பெருந்தொற்று உலகைத் தாக்கும். இதைத் தவிர்க்க முடியாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி சர் பாட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக இப்போதே இங்கிலாந்து அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே புதிதாக வரப் போகும் அரசு இந்தப் பெருந்தொற்றை சமாளிக்கத் தேவையான சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.




முன்கூட்டியே நோய்ப் பரவலைக் கண்டுபிடிப்பது மிக மிக முக்கியம். அதை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசிகள், சிகிச்சை முறைகளை திட்டமிட வேண்டும். இதை முன்கூட்டியே செய்து விட்டால், கோவிட் 19 சமயத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெரும் பாதிப்புகளை சமாளிக்க முடியும்.  சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும் இதில் முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


நான் 2021ம் ஆண்டே இதுகுறித்துக் கூறியிருந்தேன். ஆனால் 2023ல் நடந்த ஜி7 மாநாட்டில் இதுகுறித்து பேசப்படவே இல்லை. நீங்கள் இந்த பெருந்தொற்று அபாயத்தை தவிர்க்க முடியாது. அதை மறந்து விட்டு வேறு எதையும் திட்டமிடவும் முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


கொரோனா பெருந்தொற்று இப்போது மட்டுப்பட்டு விட்டது. ஆனாலும் அது இன்னும் முழுமையாக ஒழியவில்லை. ஆங்காங்கே கொரோனா இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் புதிய பெருந்தொற்று குறித்து இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரித்திருப்பது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.