சூப்பர் நியூஸ்... 2011ல் மூடப்பட்ட.. அண்ணா நகர் பூங்கா டவர் இன்று மீண்டும் திறப்பு!

Su.tha Arivalagan
Mar 20, 2023,10:23 AM IST

சென்னை: சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக திகழ்ந்த அண்ணா நகர் பூங்காவின் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.


அந்தக் காலத்து சினிமாக்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு முக்கியஅடையாளம்தான் அண்ணா நகர் டவர் பூங்கா. பழைய ரஜினி, கமல் படங்களில் அடிக்கடி இதைப் பார்க்கலாம். காதல் டூயட்டுகள், அதிரடி சண்டைகள் என ஏதாவது ஒரு ரூபத்தில் அண்ணா நகர் டவர் பூங்கா சினிமாவில் இடம் பெறுவது வழக்கம்.


அண்ணா நகரின் முக்கியஅடையாளமாக மட்டுமல்லாமல், சென்னையின் அடையாளமாகவும் டவர் பூங்கா திகழ்கிறது. அழகுக்கும், கம்பீரத்திற்கும் பெயர் போன இந்த பூங்காவில் உள்ள கோபுரம் 2011ம் ஆண்டு மூடப்பட்டது. சில தற்கொலைகள் உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்கள் காரணமாக பூங்கா டவர் மூடப்பட்டு விட்டது. 




பூங்காவுக்குள் மட்டுமே மக்கள் பிரவேசிக்க முடிந்தது. டவர் மீது ஏறி சென்னை நகரின் அழகை ரசிக்க தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் டவர் பாழடைந்து கிடந்தது. அதை சரி செய்து,  பாதுகாப்பு அம்சங்களை இணைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதேபோல பூங்காவும் சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவியது.


இதைத்தொடர்ந்து தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் டவரும், பூங்காவும் சீரமைக்கப்பட்டு சூப்பராக மாறியுள்ளன. டவரிலும் பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மேலிருந்து யாரும் குதித்து விடாமல் தடுக்கும் வகையில்  தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல டவர் மீது ஏறிச் செல்லும்போதும் யாரும் தவறி விழுந்து விடாமலும் நவீன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


இத்தோடு மொத்தப் பூங்காவும் புதுப் பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. பார்க்கவே ஜோராக காணப்படும் இந்த டவரும், பூங்காவும் மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறக்கப்படுகிறது. டவர் மீது ஏறி மக்கள் இனி மீண்டும் சென்னையின் அழகை கண்டு ரசிக்க முடியும்.  சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் கே.என். நேரு பூங்காவை இன்று திறந்து வைக்கிறார்.


அண்ணா கட்டிய கோபுரம்


1968ம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் உலக வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. கிட்டத்தட்ட திருவிழா போல அப்போது அது நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய கண்காட்சி அது. அதையொட்டி சென்னை நகர் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. பல்வேறு அடையாளச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன.


அப்படி ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான் இந்த டவர் பூங்கா. அண்ணா நகர் டவர் பூங்காவில் உள்ள கோபுரமானது 12 தளங்களைக் கொண்டது. சென்னை நகரிலேயே மிகவும் உயரமான பூங்கா கோபுரம் இது என்ற பெருமை இதற்கு உண்டு. டாக்டர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா என்பதுதான் இதன் ஒரிஜினல் பெயர். ஆனால் எல்லோரும் செல்லமாக அண்ணா நகர் டவர் பூங்கா என்றே அழைப்பது வழக்கம்.


இந்தப் பூங்காவை 1968ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா முன்னிலையில், அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி திறந்து வைத்தார். இந்தப் பூங்காவை கட்டியவர் புகழ்பெற்ற கல்வித்தந்தை, பொறியியல் நிபுணர் பி.எஸ்.அப்துல் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.