சீக்கிரம் காணாமல் போய் விடுவார் அண்ணாமலை.. அவரது கனவு பலிக்காது.. அதிமுக கடும் பாய்ச்சல்

Su.tha Arivalagan
Aug 26, 2024,01:41 PM IST

சென்னை:   அண்ணாமலைக்கு பயம் வந்து விட்டது. தனது தலைமைப் பொறுப்பு பறிக்கப்படும் என்ற அச்சம் வந்து விட்டது. இதனால் இருக்கிற வரையில் எதையாவது சொல்லி விட்டுப் போகலாம் என்று பேசி வருகிறார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.


அதிமுக - அண்ணாமலை மோதல் நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டே போகிறது. நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் மிக் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமியை சாடியிருந்தார் அண்ணாமலை. இதற்கு கே.பி. முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாமலைக்கு பயம் வந்து விட்டது. தமிழகத்தில் தான்தோன்றித்தனமாக பேசுவதால் தலைமைப் பொறுப்பு இருக்காது என்ற நிலையில் அவர் இருக்கிறார். எனவே, இருக்கின்ற வரையில் எதையாவது சொல்லி விட்டுப் போகலாம் என்று பேசி வருகிறார். இதை தலைமை உணர்ந்து விரைவில் விலக்கப்படுவார் என்று நம்புகிறேன். 


எப்படி வெளியேற்றுவது என்று பார்த்து லண்டனுக்குப் படிக்கப் போவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.  அரசியல் பின்புலம் இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. சாதாரண தொண்டராக இருந்து 40 ஆண்டு 50 ஆண்டு காலம் உழைத்து கட்சி தொடங்கியதிலிருந்தே சிலுவம்பாளையத்தில் கிளைச் செயலாளராக இருந்தவர். 52 வருடம் உழைத்து, கொள்கையிலிருந்து பிறழாமல் ஏற்றுக் கொண்ட தலைமையிலிருந்து பிறழாமல் அரசியல் செய்வது காரணமாகத்தான், எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இயக்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். 


யாருடைய சிபாரிசு காரணமாகவும் அவர் தலைமைப் பதவிக்கு வரவில்லை. அதிமுக வரும் சட்டசபைத் தேர்தலில் 4வது இடத்துக்குப் போகும் என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்கும். சீக்கிரம் காணாமல் போகப் போகிறவர் அண்ணாமலைதான் என்று அவர் சாடியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்