மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

Su.tha Arivalagan
Mar 11, 2025,05:18 PM IST

சென்னை: டெல்லி மது பான ஊழல் போல தமிழ்நாட்டிலும் மதுபான ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டுள்ளார். காலையில் அவர் போட்ட இந்த டிவீட்டால் அரசியல் களத்தில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு மிகப் பெரிய ரெய்டு நடந்து வந்தது. அது தமிழ்நாட்டின் மது பான விற்பனையை நிர்வகிக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலக அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு. ஒரு நாளில் இந்த ரெய்டு முடியவில்லை. 3 நாட்களாக நடந்து வந்த ரெய்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்த ரெய்டுக்கு என்ன காரணம், ரெய்டின்போது என்னவெல்லாம் சிக்கியது, எதைக் குறி வைத்து இந்த ரெய்டு நடந்தது என்று பெரும் கேள்விகள் எழுந்தன. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் தீவிரமாக குரல் கொடுத்து வருவதால், அமலாக்கத்துறையை ஏவி ரெய்டு நடத்துகிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறி வைத்து இந்த ரெய்டு நடப்பதாக இன்னொரு புறம் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.




இப்படி பல்வேறு வகையில் பெரும் பரபரப்பையும், கேள்விகளையும் எழுப்பிய இந்த ரெய்டு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார், எக்ஸ் தளத்திலும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஒரு டிவீட் போட்டுள்ளார் அண்ணாமலை. அதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


அண்ணாமலை போட்ட டிவீட் இதுதான்:


Delhi Liquor Scam. 

Chhattisgarh Liquor Scam. 

Tamil Nadu Liquor Scam


டெல்லியில் நடந்த மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சிக்கித்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்குப் போனார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல சட்டிஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மீதும் மதுபான ஊழல் புகார் உள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு போலவே, பூபேஷ் பாகல், அவரது மகன் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலை போட்டுள்ள இந்த டிவீட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


என்ன சொல்ல வருகிறார் அண்ணாமலை?