அண்ணாமலை வெளியிடப் போகும் "ஊழல் பட்டியல்".. அத்தனை பேரின் பார்வையும் ஏப்ரல் 14 மீது!

Su.tha Arivalagan
Mar 09, 2023,12:38 PM IST

சென்னை: திமுக அமைச்சர்களின் மீதான ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


"தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்".. இதுதான் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு.


ஆனால் இந்த அறிவிப்பை முன்பே அவர் வெளியிட்டு விட்டார். திமுக அமைச்சரவையில் யாரெல்லாம் ஊழல் செய்துள்ளார்கள் என்பதை இணையதளம் அமைத்து வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. தற்போது அதை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப் போவதாக கூறியுள்ளார் அவர்.




திமுக அமைச்சர்களைப் பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுதான் கடுமையாக  குற்றம் சாட்டி வருகிறார் அண்ணாமலை. இருவருக்கும் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. தொடர்ந்து இருவரும் சரமாரியாக  குற்றம் சாட்டி வந்தனர் .  செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்களையும் சுமத்தி வந்தார் அண்ணாமலை. அவரை சாராய அமைச்சர் என்றே அழைத்தும் வந்தார்.


அதேபோல  உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோர் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில்தான் வெப்சைட் மூலம் திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள் மீது அவர் பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தியுள்ள நிலையில் ஏப்ரல் 14ம் தேதி என்ன மாதிரியான குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை வைக்கப் போகிறார்.. யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெறப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.