டி.ஆர்.பாலு வழக்கு.. சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை.. டிச. 21க்கு ஒத்திவைப்பு

Su.tha Arivalagan
Oct 05, 2023,04:10 PM IST

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி .ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கு டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


திமுக தலைவர்கள் மீது திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில் அவர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவை குறித்து கூறியிருந்தார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்து கணக்குகளை இதுபோல வெளியிட்டார் அண்ணாமலை.  அதில் டி ஆர் பாலுவின் பெயரும் இருந்தது. 




இதையடுத்து அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டார் டி.ஆர்.பாலு. அண்ணாமலையை தன்மீது கூறிய புகார்களுக்கு உரிய ஆதாரத்தை வழங்க வேண்டும் இல்லை எனில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என டி ஆர் பாலு கூறி இருந்தார்.


இருப்பினும் பாஜக தலைவர் அண்ணாமலை தான் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றார். இதையடுத்து  டி.ஆர்.பாலு அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை 17 வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தார்.


அந்த மனுவில், 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் எம்பி ஆகவும் ,மத்திய அமைச்சராகவும் பதவி வகிக்கிறேன். பொதுமக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. அதை களங்கப்படுத்தும் நோக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அண்ணாமலை நேரில் ஆஜராக நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். இதையடுத்து ஜூலை 14ம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராார்.


அதைத் தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அண்ணாமலை மீண்டும் ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் வழக்கு டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.