திமுகவுக்கு எதிரான 2வது ஊழல் பட்டியல் ரெடி..  விரைவில் ரிலீஸ்.. அண்ணாமலை

Su.tha Arivalagan
Jul 14, 2023,03:48 PM IST

சென்னை: திமுகவுக்கு எதிரான 2வது ஊழல் பட்டியல் ரெடியாக இருக்கிறது. ஆளுநரிடம் அதைக் கொடுப்பதா அல்லது பொதுமக்கள் மத்தியில் வெளியிடுவதா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிட்டார் அண்ணாமலை. இந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குறித்தும் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து  டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கோர்ட் அண்ணாமலைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அண்ணாமலை கோர்ட்டுக்கு வந்தார்.


மாநாட்டுக்குப் போவது போல அண்ணாமலையுடன் பெரும் திரளான பாஜகவினர் கூடியதால் கோர்ட்டுக்கு வெளியே உள்ள சாலை நெடுகிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் இப்படி கூட்டம் கூடியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


நீதிபதி முன்பு ஆஜரான பின்னர் வெளியே  வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதால், 2வது லிஸ்ட் ரெடியா இருக்கு. ஊழலுக்கு எதிரான பாஜகவின் பயணம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். விரைவில் 2ம் பாகத்தை நான் வெளியிடுவேன். 


2ம் பாகத்தை ஆளுநரிடம் சீலிடப்பட்ட கவரில் வைத்துக் கொடுப்பதா அல்லது பொது வெளியில் வெளியிடுவதா என்பதை விரைவில் முடிவு செய்வேன்.  2வது பாகத்தில் கிட்டத்தட்ட 300 பினாமிகள் குறித்த விவரம் உள்ளது.  அனைவருமே திமுகவினருக்குச் சொந்தமானவர்கள்தான். ரத்த பந்தமும் இதில் இருக்கிறது. புகைப்படங்களுடன் வெளியிடுவேன். எனது பாத யாத்திரைக்கு முன்பாக இதை வெளியிட்டு விடுவேன்.


சிபிஐயிடம் இதைக் கொடுக்கலாம்.. ஆனால் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கும் முடிவை திரும்பப் பெற்றுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸில் கூட இந்தப் பட்டியலை கொடுக்கலாம். எதுவாக இருந்தாலும் பாதயாத்திரைக்கு முன்பு பட்டியல் வெளியாகும் என்றார் அண்ணாமலை.