கச்சத்தீவை உறுதியாக மீட்போம்.. அடித்து சொன்ன.. அண்ணாமலை

Meenakshi
Apr 13, 2024,04:51 PM IST
ராமநாதபுரம்: காங்கிரஸ் அரசும் திமுக அரசும் தாரைவார்த்த கச்சத்தீவை உறுதியாக மீட்போம். மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓபிஎஸ் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் அரசும் திமுக அரசும் தாரைவார்த்த கச்சத்தீவை உறுதியாக மீட்போம். ஜெ.வின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓபிஎஸ். ராமநாதபுரத்திற்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் குரல் கொடுப்பார்.



ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடி போட்டியிட்டால் எப்படி ஆதரவு கொடுப்பீர்களோ அப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தர வேண்டும். பிரதமர் மோடி ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி எப்போது பேசுவார் என்று உலக தலைவர்கள் எதிர்பாத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியிடம் எப்போது வேண்டுமானாலும் பேசும் செல்வாக்கு பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான். எம்.ஜி.ஆரை எப்படி கருணாநிதி வெளியேற்றினாரோ அதை போல ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி இருக்கிறார். ராமநாதபுரத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தான் ஓ.பன்னீர்செல்வத்தின் விஸ்வரூபம் தெரியும் என்று கூறியுள்ளார்.