முதல்ல இந்தப் பேயை ஓட்டிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன்.. ஜெயக்குமாருக்கு அண்ணாமலை கலகல பதில்!

Meenakshi
Jul 11, 2024,06:54 PM IST

சென்னை: தமிழ் நாட்டில் இருக்கும் பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்து விட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலகலப்பான பதில் கொடுத்துள்ளார்.


சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவர் திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். 




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தேச விடுதலைக்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி தன் உயிரை தியாகம் செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரில் இறுதிவரை பின்வாங்காமல் அச்சமின்றி போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.


மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினோம். 2015 ஆம் ஆண்டு மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டு புகழ் சேர்த்த பெருமைக்குரியவர் பிரதமர் நரேந்திர மோடி. 


தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தால் ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன். காத்திருங்கள் என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.


முன்னதாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணாமலை என்ற வேதாளம் இப்போது எங்களை விட்டு விட்டு, செல்வப் பெருந்தைகையைப் பிடித்துக் கொண்டு விட்டது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதற்குத்தான் இப்படி பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை.


ஆக மொத்தம் ராகவா லாரன்ஸ் படம் போல.. பேய்க்கும் பேய்க்கும் சண்டையாக மாறியிருக்கிறது அரசியல் களம்!