என்ன நடக்கிறது?.. விலக விரும்பும் அண்ணாமலை.. விட மனமில்லாத பாஜக!

Su.tha Arivalagan
Oct 03, 2023,08:13 AM IST

டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவராக நீடிக்க வேண்டும் என்றால் தனது பாணியில் செயல்பட அனுமதிக்குமாறும் அப்படி இல்லாதபட்சத்தில் தான் பதவி விலகவும் தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை கூறியதா தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது கோரிக்கையை பாஜக மேலிடம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


தமிழ்நாடு பாஜக தலைவர்களைப் பொறுத்தவரை மேலிடத்தின் கட்டளைப்படியே செயல்படுவது வழக்கம். மேலிடம் என்ன நினைக்கிறதோ அப்படியே செயல்படுவதுதான் இதுவரை இருந்து வந்த வழக்கம். மேலிடத்தின் கோட்டைத் தாண்ட மாட்டார்கள் பெரும்பாலும். அப்படியே இருந்தாலும் மேலிடத்திடம் நைச்சியமாக பேசி புரிய வைத்து அவர்கள் சம்மதித்தால் மட்டுமே தாங்கள் நினைப்பதை செயல்படுத்த முனைவார்கள்.


ஆனால் அண்ணாமலை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடக்கிறார் என்பதுதான் பிரச்சினையே. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் நோக்கில்தான் அவர் அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால் அவரது செயல்பாடுகளும், அணுகுமுறைகளும்தான் பலருக்குப் பிரச்சினையாகியுள்ளது. பாஜகவுக்குள்ளேயே கூட அவர் மீதான அதிருப்தி அதிகரிக்கவும் இதுவே காரணமாகி விட்டது.


உண்மையில் அண்ணாமலை தலைவரான பிறகுதான் பாஜக பல்வேறு முனைகளிலும் ஊடுறுவ ஆரம்பித்தது. பாஜகவின் தாக்கம் வலுவடையவும்  ஆரம்பித்தது. இதை திராவிடக் கட்சிகளே கூட ஒத்துக் கொள்வார்கள். காரணம், அண்ணாமலை யாரையும் மதிப்பதில்லை. பெரிய பெரிய ஐக்கான்களை கூட "பரவை முனியம்மா ஸ்டைலில்".. இதை வச்சுட்டுத்தான் இத்தனை காலமாக உருட்டிட்டு இருக்கீங்களா என்று போட்டு வெளுத்து விட்டுப் போய் விடுகிறார். இதனால்தான் அவருக்கு எதிர்ப்புகளும் அதிகம்.




ஒரு கட்சித் தலைவருக்கு உரிய இலக்கணம், நிதாதனம், பொறுமை, தெளிவு, பக்குவம் அவரிடம் இல்லை என்பது பொதுவான புகாராக உள்ளது. இதை பாஜகவினரும் கூட ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். ஆனால் பாஜகவை வளர்க்க இப்படி அதிரடியாக செய்தால்தான் உண்டு என்பது அண்ணாமலையின் எண்ணமாகும். இதனால்தான் அவர் தொடர்ந்து முரண்பாடான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். இது பாஜகவுக்கு நன்மை பயப்பதை விட தீமையே அதிகமாகும் என்பது பலரின் எண்ணம்.


இந்தப் பின்னணியில்தான் தற்போது முக்கியமான காலகட்டத்துக்கு வந்து நிற்கிறார் அண்ணாமலை. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று அண்ணாமலை சந்தித்தபோது தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக வைத்து விட்டதாக சொல்கிறார்கள். இதுதான் நிலைமை.. இப்படித்தான் போக வேண்டும். இப்படிப் போனால்தான் பாஜகவுக்கு நல்லது.. நாம்  யாரையும் தாஜா செய்ய வேண்டிய அவசியமில்லை. திமுக அதிமுக எதிர்ப்பை ஒருங்கிணைத்தாலே போதும் மிகப் பெரிய வெற்றி உறுதி என்று தெளிவாக கூறி விட்டாராம் அண்ணாமலை.


எனக்கு தன்மானம் முக்கியம், அதை விட்டு விட்டு என்னால் வேலை பார்க்க முடியாது. பாஜகவை சொந்தக் காலில் வளர்க்க விரும்புகிறேன். அதற்கு நான் தடையாக இருப்பேன் என்று மேலிடம் கருதினால் நான் விலகிக் கொள்ளவும் தயார் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக நிர்மலா சீதாராமன் ஏற்க மறுத்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது அண்ணாமலையை விட்டு விட பாஜக தயாராக இல்லை. அவர்தான் தலைவர் என்பதிலும் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.


அதேசமயம் அதிமுகவும் முக்கியம் என்று பாஜக  மேலிடம் கருதுகிறது. கோபமடைந்துள்ள அதிமுகவை சமாளிப்பது, சமாதானப்படுத்துவது குறித்து யோசித்து வருகிறது.  அண்ணாமலையையும், எடப்பாடி பழனிச்சாமியையும் எப்படி சமாதானப்படுத்தி இணைந்து பணியாற்றச் செய்வது என்று யோசித்து வருகிறது. அடுத்து அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்கவுள்ளார். அப்போது காம்பரமைஸ் பார்முலா குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எல்லாம் சரியாக நடந்தால் அண்ணாமலையே தலைவராக தொடர்வார்.. அல்லது அவரது நிலைப்பாட்டை விட்டு இறங்கி வர மறுத்தால்.. மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.