தேர்தல் ஆணையம் சோதனை.. "நான் ஏன் ஹெலிகாப்டரில் போனேன்".. அண்ணாமலை விளக்கம்!

Su.tha Arivalagan
Apr 18, 2023,01:10 PM IST
மங்களூர்: தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நான் ஹெலிகாப்டரில் பயணித்தேன்.. காங்கிரஸார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாஜகவேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அண்ணாமலையும் கூடவே இருக்கிறார், கூடவே பயணிக்கிறார்.

அந்த வகையில், அவர் உடுப்பிக்கு வந்திருந்தார். அங்கு வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சுல்லியா, சிக்மகளூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் அவர் பயணித்தார். சிக்மகளூரு தொகுதியில்தான் தமிழ்நாட்டுக்கான பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி போட்டியிடுகிறார். இதனால் அவரது வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கும் அண்ணாமலை போயிருந்தார்.




இந்த நிலையில் உடுப்பிக்கு அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையும் சோதனையிடப்பட்டது. சோதனையின் இறுதியில், அவரது ஹெலிகாப்டர் பயணத்தில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும் உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா இதுகுறித்துக் கூறுகையில், அண்ணாமலை  திங்கள்கிழமை காலை 9.55 மணிக்கு உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.  அவரது ஹெலிகாப்டரும், அவர் கொண்டு வந்திருந்த பையும் சோதனையிடப்பட்டது. அதில் எதுவும் சிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதி மீறலும் இருப்பதாக கண்டறியப்படவில்லை.

மேலும் அண்ணாமலை பயணம் செய்த ஒவ்வொரு இடத்திலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். எங்குமே  நடத்தை விதி மீறல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். ஆனால் காப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சோரகே, அண்ணாமலை பெருமளவு பணத்துடன் வந்ததாக கூறி வருகிறார். 

இந்தப் புகாரை தற்போது அண்ணாமலை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உடுப்பி,  சுல்லியா, சிக்மகளூரு என்று பல்வேறு ஊர்களுக்கு நான் போக வேண்டியிருந்தது. உரியநேரத்துக்குப் போக வேண்டும் என்பதால் நான் ஹெலிகாப்டரில் போனேன். அதில் தவறு ஏதும் இல்லை.சோரகே வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நான் எந்தப் பணத்தையும் எடுத்துப் போகவில்லை என்று விளக்கியுள்ளார் அண்ணாமலை.