அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று அமித் ஷா கூறவில்லையே.. அண்ணாமலை புது விளக்கம்

Su.tha Arivalagan
Apr 02, 2023,02:09 PM IST
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே பேச முடியாது. அமித்ஷாவும் கூட்டணி உறுதி என்று கூறவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகஇப்போது இருக்கிறது என்றுதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். 2024 லோக்சபா தேரத்லுக்கு அந்தக் கூட்டணியை அவர் உறுதி செய்யவில்லை. தொகுதிப் பங்கீடு எல்லாம் முடிவடைய வேண்டும். அப்போதுதான் கூட்டணி என்பது முடிவாகும். எந்தக் கட்சியும் இப்போதே கூட்டணி முடிவாகி விட்டதாக கூறாது.

2024 தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. அப்போது நடக்கப் போகும் தேர்தலுக்கு இப்போதே முதலுரையும் எழுத முடியாது, முடிவுரையும் எழுத முடியாது. நான் ஒரு போதும்  அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கூறவில்லை. எதுவுமே கல்லில் எழுதிய  எழுத்துக்கள் இல்லை.



நான் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது அதிகாரப்பூர்வமானது அல்ல. நான் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினேன். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. தமிழ்நாடு நிலவரம் குறித்தும் அமித்ஷாவுடன் நான் பேசினேன். ஆகவே, தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் முடிவு செய்வார்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்போம்.

தமிழ்நாட்டில் பாஜக நன்றாக வளர்ந்துள்ளது. தென்காசி முதல் நன்றாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்லும் அளவுக்கு நாங்கள் செயல்பட வேண்டும்.  நான் எப்போதும் தொலைநோக்கு அடிப்படையில்தான் பேசி வருகிறேன். நானாாக இருந்தாலும் சரி, எல் முருகனாக இருந்தாலும் சரி, வானதி சீனிவாசனாக இருந்தாலும் சரி கட்சி வளர்ச்சியை மனதில் வைத்துத்தான் பேசுவார்கள். 

நான் ஏப்ரல் 14ம் தேதிதான் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தேன். இப்போதே கேட்கிறீர்கள்.. நிச்சயம் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அண்ணாமலை.

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அதேபோல எல். முருகன், வானதி சீனிவாசன், முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி ஆகியோரும் சந்தித்துப் பேசினார்கள். கூட்டணியில் குழப்பம் வரக் கூடாது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் அறிவுரை கொடுத்ததாக நம்பப்படுகிறது.