"சனாதன"..  அமைச்சர் சேகர் பாபு செப். 10க்குள் பதவி விலக வேண்டும்.. அண்ணாமலை

Meenakshi
Sep 05, 2023,02:52 PM IST
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன விவகாரம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் பேசுகையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல என்றும், இவருக்கு அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. 

இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.

செப்டம்பர் 10ம் தேதிக்குள் தனது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து பி.கே.சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை. வரும் செப்டம்பர் 10ம் தேதிக்குள் பி.கே. சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவி்த்தார்.

திமுகவினரும், பாஜகவினரும் உதயநிதி ஸ்டாலின் பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக் கொண்டுள்ளதால் அந்தப் பக்கமே படு சூடாக காட்சி தருகிறது.