வட சென்னையில் நாமதான்.. பொன்னை பாலுவைத் தூண்டி விட்டு.. காரியம் சாதித்த அஞ்சலை.. பரபர தகவல்!

Su.tha Arivalagan
Jul 20, 2024,05:48 PM IST
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கைத் தீர்த்துக் கட்டி விட்டால் வட சென்னையில் நாமதான். எல்லாத்தையும் நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம் என்று ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவைத் தூண்டி விட்டு தனது பழியைத் தீர்த்துக் கொண்டுள்ளார் அஞ்சலை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின முக்கியமான தலித் தலைவராக உருவெடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அவரை கடந்த 5ம் தேதி அவரது வீட்டுக்கு அருகே வைத்து ஒரு கும்பல் மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவிலான போலீஸ் டீம் விசாரணையில் இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட சென்னையை சல்லடை போட்டு ஒரு குற்றவாளியும் தப்பி விடாத வகையில் கிடுக்குப் பிடி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான திருவேங்கடம் என்கவுண்டரில் இறந்து விட்டார். மற்ற 14 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதில் முக்கிய குற்றவாளியான அஞ்சலையிடம் தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. கொண்டித்தோப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல முக்கிய தகவல்களை அஞ்சலை கக்கியுள்ளதாக தெரிகிறது.  ஆம்ஸ்ட்ராங்கைப் போட்டுத் தள்ள மிகத் தெளிவாக, விரிவான முறையில் திட்டம் தீட்டியுள்ளனர். அதுகுறித்த தகவலை அஞ்சலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆற்காடு சுரேஷின் காதலிதான் அஞ்சலை. ஆற்காடு சுரேஷ் சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என்று அஞ்சலை கருதினார். இதனால் பழி தீர்க்கக்  காத்திருந்தார். சுரேஷின் தம்பியான பொன்னை பாலுவைத் தூண்டி விட்டால் தனது நோக்கம் நிறைவேறும் என்று கருதிய அவர் பலமுறை பொன்னை பாலுவை அழைத்துப் பேசியுள்ளார். அவரை தூண்டி விட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டால் வட சென்னையில் நாம வச்சதுதான் சட்டம். எல்லாமே நமது கட்டுக்குள் வந்து விடும் என்று ஆசை காட்டியுள்ளார்.

இதையடுத்து பொன்னை பாலு கும்பலுடன் சித்தூர், புழல், அரக்கோணம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் பல கட்டமாக ஆலோசனை நடத்தி திட்டம் தீட்டியுள்ளனர். அதன் பிறகுதான் கொலைக் கும்பல்  ரெடி செய்யப்பட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர். கொலைக் கும்பலுக்குத் தேவையான பணத்தில் அஞ்சலையும் ஒரு பங்கு கொடுத்துள்ளார். கொலையாளிகள் தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அவரது 2 வங்கிக் கணக்குகளில்தான் பணப் புழக்கம் இருந்துள்ளது. இந்தக் கொலையில் யார் யாருக்கெல்லாம்  தொடர்பு உள்ளது என்பது குறித்தும் அஞ்சலை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.