ஜல்லிக்கட்டுக் காளைகளின்.. கூரிய கொம்பில் ரப்பர் புஷ்ஷை மாட்டிரலாம்.. இது நல்ல ஐடியாவா இருக்கே!

Su.tha Arivalagan
Jan 01, 2024,06:48 PM IST

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் கூர்மையான கொம்பு குத்திதான் பலர் காயமடைகின்றனர், உயிரிழப்பு வரை இது போய் விடுகிறது. இந்த நிலையில் கூர்மையான கொம்புகளால் குத்தி காயமடைவதைத் தடுக்க புதிய ஐடியா ஒன்றை விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.


அதாவது கூர்மையான கொம்புகளின் முனைப் பகுதியில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் புஷ்களை மாட்டி விட்டால், குத்தும்போது ஏற்படும் காயத்தை பெருமளவில் குறைக்கலாம் என்பதே இந்த ஐடியா.


தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. அந்தக் காலத்தில் வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு பார்க்கப்பட்டது. காளையை அடக்கினால்தான் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று கூறிய தந்தையர் அந்தக் காலத்தில் இருந்தனர். ஒருவரின் வீரத்தைப் பரிசோதிக்கும் போட்டியாக ஜல்லிக்கட்டு இருந்தது.




ஆனால் இன்று காலம் மாறி விட்டது. இப்படிப்பட்ட போட்டிகள், சவால்கள் எல்லாம் இப்போது இடம் பெறுவதில்லை. அதேசமயம், இந்த விளையாட்டை வீர விளையாட்டாக இன்னும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நமது கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாக இது மாறியிருக்கிறது.


இருப்பினும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது காளைகள் குத்தியும், தூக்கிப் போடுவதாலும் பலர் காயமடைகிறார்கள். பலர் உயிரிழக்கிறார்கள். இதைத் தடுக்கவே முடியவில்லை, தவிர்க்கவும் முடியவிலல்லை. இந்த நிலையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது காளைகளின் கொம்பில் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் புஷ்ஷை மாட்டி விடலாம் என்ற  யோசனையை விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோல மாட்டுவதால், மாட்டின் கொம்பு ஒருவரின் மீது படும்போது பெரிய அளவில் காயம் ஏற்படுவதைக் குறைக்க முடியும். சிறிய அளவிலான காயத்தோடு வீரர்கள் தப்ப வாய்ப்பு கிடைக்கும். இதனால் பல சிறு சிறு காய நிகழ்வுகளைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதால் இந்த யோசனையை  அமல்படுத்திப் பார்க்கலாம் என்ற யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் அரசுத் தரப்பில் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.


ஜனவரி மாதம் பிறந்து விட்டதால் தற்போது ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது, அவற்றைத் தயார் செய்வது போன்ற பணிகள் தொடங்கி விட்டன. மதுரை மாவட்டத்தின் 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும். அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், பாலமேட்டில் அதற்கு அடுத்த நாளும், அலங்காநல்லூரில் 3வது நாளும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதது.