ஆந்திராவில்.. 2 ரயில்கள் மோதி பெரும் விபத்து.. மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு

Meenakshi
Oct 30, 2023,02:45 PM IST

விஜயநகரம்: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில்  பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே  பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த பாலசா பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பாலசா ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவில் விபத்து நடந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை செய்தனர்.




இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரயில் விபத்தில் பலியானவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் நிவாரணை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணமாக ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.