சண்டை போடலை.. கோபப்படலை.. ச்சும்மாவே நின்னு.. ரூ. 1.25 கோடியைத் தட்டிச் சென்ற சேவல்.. கெத்துணே நீ!
கோதாவரி (ஆந்திரப் பிரதேசம்): மகர சங்கராந்தி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற சேவல் சண்டையில், களத்தில் சண்டையிடாமல் வேடிக்கை பார்த்த, சேவல் 1.25 கோடி பரிசு தொகையை அள்ளி சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஆந்திராவின் பாரம்பரியமான சேவல் சண்டை ஒவ்வொரு வருடமும் நடத்துவது வழக்கம். ஆனால் சேவல் சண்டை சூதாட்டமாக கருதப்படுவதால் இதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கிராமப்புறங்களில் சேவல் சண்டை தற்போது வரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சேவல் சண்டை நடைபெற்று வந்தது.
இதனை காண பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வத்துடன் குவிந்தனர். சேவல் சண்டை நடத்தப்பட்டு இதுவரை 2000 கோடி வரை ரூபாய் சூதாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த சேவல் சண்டையில் வினோதமான நிகழ்வு நடந்தேறியது.
அங்கு ஐந்து சேவல்கள் ஒரே வளையத்திற்குள் சண்டை போட களம் இறக்கினர். இதில் நான்கு சேவல்கள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போட்டன. அதாவது தாங்கள் வந்த வேலையை அவை சரியாக பார்த்தன. ஒரு கட்டத்தில் நான்கு சேவல்களும் தோல்வியை தழுவி அடுத்தடுத்து வெளியேறின. ஆனால் சண்டை போட்ட நான்கு சேவலுடன் ஒரு சேவல் மட்டும் சண்டை போடாமல் கடைசிவரை நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது. அது எந்த சேவலுடனும் சண்டை போடவில்லை. கோபம் காட்டவில்லை, கொஞ்சம் கூட டென்ஷனே ஆகவில்லை.
மற்ற சேவல்கள் மயக்கம் அடைந்ததால் சும்மா நின்னு, வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு ரூபாய் 1.25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை போடலை, ரத்தம் சிந்தலை, அடிபட்டு காயமாகலை.. கொஞ்சம் வியர்வையே சிந்தாமல் ஜம்முன்னு நின்னு தனது உரிமையாளரை கோடீஸ்வரானாக்கி விட்டது இந்த பலே சேவல்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்