ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 03 - ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி!

Aadmika
Dec 19, 2023,08:03 AM IST

திருப்பாவை பாசுரம் 03 :


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கி பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.




பொருள் :


தனது திருவடிகளால் மூன்ற உலகையும் அளந்த உத்தமனான திருமாலை எண்ணி பாவை நோன்பிருந்து, நாம் அவரின் நாமங்களை பாடினால் மாதந்தோறும் தவறாமல் மழை பெய்யும். இதனால் வயல்களில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் வானம் அளவிற்கு வளர்ந்து, விளைச்சலை தரும். அந்த வயல் வெளியில் மீன்கள் துள்ளி விளையாடும். எங்கும் செழிப்பாக இருக்கும் என்பதால் பூக்களில் தேன் எடுக்க வண்டு கூட்டம் தேடி வரும். செழித்து வளர்ந்த புற்களை மகிழ்ச்சியுடன் மேய்ந்து விட்டு வரும் பசுக்கள், வள்ளலைப் போல் வாரி வாரி பால் கொடுக்குள். இதனால் நம்முடைய வீடுகளில் எப்போதும் குறைவில்லாத செல்வம் நிறைந்து காணப்படும் பெண்களே என்கிறாள் ஆண்டாள்.


விளக்கம் :


நல்லவர் ஒருவர் இருந்தால் அவரால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் மழை பெய்யும் என்பார் திருவள்ளுவர். அது போல் இறைவனின் பெருமைகளை உணர்ந்து நாம் ஒரு சிலர் பக்தி செய்வதால் நாம் நன்மை அடைவதுடன் உலகத்தில் உள்ள அனைவரும் செழிப்பான, குறைவில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள். ஒருவர் மனதார பக்தி செய்தாலும் இறைவன் மனம் மகிழ்ந்து, அவரை சேர்ந்தவர்களுக்கும் வேண்டிய நலன்களை வாரி வழங்குவார் என இந்த பாடலில் விளக்கி உள்ளார் ஆண்டாள்.