ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 30 - வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

Aadmika
Jan 15, 2024,08:02 AM IST

திருப்பாவை பாசுரம் 30 :


வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டபிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.




பொருள் :


பாற்கடலை கடைந்த மாதவனும், கேசி என்ற அசுரனை வதம் செய்த கேசவனுமான கண்ணனை, சந்திரனை போன்ற அழகான முகத்தை உடைய பெண்கள், மிகவும் சிரமப்பட்டு, மன்றாடி கண்ணனின் அருளை பெறுவதற்காக பாவை நோன்பு இருந்துள்ளனர். அவர்கள் பாவை நோன்பு இருந்து பலன் பெற்றதை ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை போன்ற முகத்தை உடைய பெரியாழ்வாரின் பெண்ணாகிய ஆண்டாள் அழகிய தமிழில் முப்பது நாட்களும் பாடி தமிழால் மாலை சூட்டி உள்ளாாள். இந்த முப்பது பாடல்களையும் படிப்பவர்கள், வலிமையான நான்கு தோள்களை உடையனும், அழகிய சிவந்த கண்களை கொண்டவனும், செல்வத்திற்கு அதிபதியான திருமாலின் அருளை பெற்ற பிறகு எங்கு சென்றாலும் அவர்கள் செல்வ செழிப்புடன், இறைவனின் அருள் நிறைந்த இன்பமான வாழ்க்கையை வாழ்வார்கள்.


விளக்கம் : 


திருப்பாவையில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு பாடலிலும் பாவை நோன்பு பற்றியும், கண்ணனின் பெருமைகள் பற்றியும் பாடி அனைவரையும் பக்தி செய்ய அழைத்த ஆண்டாள் நாச்சியார், இறுதியான இந்த பாடலில் மார்கழியில் பாவை நோன்பு இருப்பதால் ஒருவருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விளக்கி உள்ளார். திருமாலைலின் பெருமையையும், ஆயர்குல பெண்கள் கடைபிடித்த பாவை நோன்பின் சிறப்பையும் கூறிய ஆண்டாள், தான் படைத்த இந்த முப்பது பாடல்களையும் படித்து, கண்ணனை வணங்குபவர்கள் அனைத்து விதமான செல்வ நலன்களையும் பெற்று, இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள் என குறிப்பிடுகிறார். கண்ணனின் அருளை தவிர வேறு எந்த பொன், பொருளும் வேண்டாம் என கூறிய ஆண்டாள், இந்த பாடலில் செல்வங்கள் என குறிப்பிடுவது கல்வி, ஞானம் போன்ற 16 வகையான செல்வங்களை தான். இறைவனின் அருள் கிடைத்தாலே அனைத்தும் கிடைத்ததற்கு சமம் என்பதையே இங்கு ஆண்டாள் குறிப்பிடுகிறார்.