ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 27.. "கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா.. உன்தன்னை"

Aadmika
Jan 12, 2024,10:34 AM IST

திருப்பாவை பாசுரம் 27 :


கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள் : 




தன்னை எதிர்த்து நிர்பவர்கள் எவ்வளவு பலிமையானவர்களாக இருந்தாலும் அவர்களை வெல்லக் கூடிய வலிமை படைத்த கோவிந்தனே! உன்னை போற்றி பாடி நாங்கள் பெறும் பரிசு என்பது, இந்த நாட்டை ஆளும் மன்னனை போற்றி பாடி பெறும் பரிசை விட மிக உயர்ந்தது. இனி நாங்கள் மகிழ்வுடன் தலையில் சூடா மணியையும், கழுத்தில் பல விதமான அணிகலன்களையும், கைக்கு வளையல்களையும், காதிற்கு தோடும், கூந்தலில் பலவிதமான நறுமணம் மிக்க மலர்களையும் அணிந்து கொள்வோம். இன்னும் பலவிதமான ஆடைகள், ஆபரணங்களால் எங்களை அலங்கரித்துக் கொள்வோம். அதற்கு பிறகு பாலிலேயே சமைத்து சோறு செய்து, அது கூடவே வெல்லமம், நெய் சேர்ந்த இனிப்பு உணவை சமைத்து சாப்பிட்டு மகிழ்வோம். அந்த சாதத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் அவர்களின் முழங்கை வரை நெய் வழிந்து ஓடும் அளவிற்கு நெய் சேர்த்து அந்த உணவினை மிக சுவையாக செய்ய போகிறோம். அதை அனைவரும் ஒன்றாக கூடி சாப்பிட்டு மகிழ போகிறோம்.


விளக்கம் :


ஆண்டாளின் இந்த பாடலில் இருந்தே கூடாரவல்லி என்ற சொல் உருவானதாக சொல்லப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் கடைபிடித்து வந்த பாவை நோன்பினை நிறைவு செய்ய போகிற மகிழ்வினை இந்த பாடலில் ஆண்டாள் வெளிக்காட்டுகிறார். பாவை நோன்பினை துவங்கும் போது சுவையான பால் சேறு உண்ண மாட்டோம், எங்களை அலங்கரித்து கொள்ள மாட்டோம், உன்னுடைய நினைவிலேயே இருப்போம் என்று சொன்ன ஆண்டாள் நாச்சியார், தற்போது அவற்றை எல்லாம் மகிழ்ச்சியுடன் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். அதோடு கூடாரவல்லி அன்று அரிசி, பால், வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் அக்காரஅடிசல் என்ற உணவையும் குறிப்பிடுகிறார்.  அதிகமான நெய் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் நைவேத்தியமாக படைக்கப்படும். 


கடந்த ஒரு மாதமாக உன்னுடைய தரிசனத்தையும் அருளையும் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து இன்பங்களையும் துறந்து, நோன்பு இருந்தோம். தற்போது உன்னுடைய தரிசனமும், அருளும் எங்களுக்கு கிடைத்து விட்டது. இதை விட பெரிய பரிசினை யாரும் எங்களுக்கு கொடுத்து விட முடியாது. அதனால் இனி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் என ஆண்டாள் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.