ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 25 .. "ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்"

Aadmika
Jan 10, 2024,09:37 AM IST

திருப்பாவை பாசுரம் 25 :


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள் : 




தேவகிக்கு மகனாக இரவு நேரத்தில் சிறையில் பிறந்து, அதே இரவு நேரத்தில் மறைத்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சேர்க்கப்பட்டாய். நீ மறைந்து வளர்வதை அறிந்து, அதை தாங்கிக் கொள்ள முடியாத கம்சன் தீய எண்ணத்துடன் வயிற்றில் கடும் கோபம் எனும் நெருப்புடன் இருந்தான். அவனை வதம் செய்து, நீயே உயர்ந்தவன் என உலகிற்கு எடுத்துக் காட்டிய பெருமாளே! உன்னுடைய பெருமையை உணர்ந்து உனது அருளை பெறுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் அறிந்த உன்னுடைய புகழையும், பெருமையையும் மற்றவர்களும் உணரும் படி செய்து, உனக்காக சேவை செய்ய வந்திருக்கிறோம். உன்னுடைய புகழினை பாடி இருந்தாலே துயரங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி வந்து விடும். அதனால் எங்களுக்கு உன்னுடைய அருளை தந்தருள வேண்டும்.


விளக்கம் :


கண்ணன் பிறந்தது, வளர்ந்தது, அவனுடைய வீரம், அவனுடைய பெருமை என அனைத்தையும் ஒரே பாடலில் விளக்கி உள்ளார் ஆண்டாள் நாச்சியார். இறதியாக கண்ணனின் புகழை பாடி, அவருக்காக சேவை செய்வதை தவிர வேறு எந்த செல்வமும் தங்களுக்கு வேண்டாம். இறைவனின் அருளாகிய செல்வம் மட்டும் போதும். இறைவனின் வழிபடக் கூட வேண்டாம். இறைவனை பற்றி பாடினாலே துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பங்கள் கிடைத்து விடும் என்கிறாள் ஆண்டாள். திருப்பாவையின் முதல் 20 பாடல்களிலும் பாவை நோன்பு பற்றியும், அதை எப்படி இருக்க வேண்டும் என்றும், ஆயர்பாடியின் பெருமைகளையும், கண்ணனின் பெருமைகளை பாடி மற்ற தோழிகள் அனைவரையும் எழுப்பி, பிறகு கண்ணனின் வீட்டிற்கே சென்று அங்குள்ளவர்களை எழுப்பினாள். தற்போது கடைசி 10 பாடல்களில் கண்ணனின் அருளை வேண்டியும், அந்த அருளை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் போற்றி பாடி வருகிறார் ஆண்டாள் நாச்சியார்.