ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 23..  "மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்"

Aadmika
Jan 08, 2024,09:52 AM IST

திருப்பாவை பாசுரம் 23 :


மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய 

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.




பொருள் :


மழைக்காலம் முழுவதும் மலையில் உள்ள குகையில் தூங்கிக் ஓய்வெடுத்த சிங்கம், தற்போது கம்ரமாக சீரியபடியே தூக்கத்தில் இருந்து கண் விழிக்கிறது. அது உடலில் உள்ள மயிர் கால்கள் காற்றில் மெல்லியதாக ஆடிக் கொண்டிருக்கிறது. அந்த மயிர்கால்களை சிலிர்க்க கம்பீரமான கர்ஜனையுடன் குகையில் இருந்து வெளியே வந்து, தன்னுடைய தொழிலாகிய வேட்டையை தொடர செல்கிறது. அது போல் பூக்களின் மனமும், மென்மை குணமும் கொண்ட எங்களின் கண்ணனே நீயும் உன்னுடைய கோவில் போன்ற வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். உன்னுடைய கோவிலின் வாசலில் பலவிதமான கோரிக்கையை வைத்துக் கொண்டு உன்னுடைய வருகைக்காக ஏராளமான அடியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அழகிய வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட சிம்மாசனத்தின் மீது சிங்கம் போல் கம்பீரமாக அமர்ந்து அடியார்களின் கோரிக்கைகள் என்னவென்று கேட்டு, விசாரித்து, அது நியாயமானதாக இருந்தால் நிறைவேற்ற வேண்டும்.


விளக்கம் :


இறைவனை இதுவரை இயற்கையுடன் ஒப்பிட்டு பாடிய ஆண்டாள், தற்போது காட்டிற்கு ராஜாவாக இருக்கக் கூடிய சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடுகிறார். தன்னுடைய முந்தைய பாடல்களில் உரிமையுடன் கண்ணனை எழுப்பி, எங்களுக்கு அருள் செய்ய வா என அழைத்த ஆண்டாள், பக்தியிலும் நியாயம் வேண்டும் என்ற ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறார். இறைவன் எதிரில் இருக்கிறார். அவர் நாம் என்ன கேட்டாலும் தருவார் என்பதற்காக எதை எதையோ கேட்டு விடக் கூடாது. இறைவனிடம் முதலில் அருளை மட்டுமே நாம் வேண்ட வேண்டும். இது தவிர மனிதர்களாகிய நாம் நம்முடைய கஷ்டங்களை சொல்லி வழிபட வேண்டும். இருந்தாலும், என்னுடைய வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எனக்கு கொடு என்று தான் இறைவனிடம் முறையிட வேண்டும். நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும் நமக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்று. அதையே இந்த பாடலில் ஆண்டாள் நாச்சியாரும் கண்ணிடம் கேட்கிறார். ஒரு அரசன் மக்களின் குறைகளை கேட்பது போல் நீயும் அடியார்களாகிய ஆயர்குலப் பெண்களான எங்களின் கோரிக்கையை கேள். அவற்றில் எது நியாயம் என்பதை விசாரித்து, அது நியாயமானதாக இருந்தால் மட்டும் அவற்றை நிறைவேற்றி வை என கேட்கிறார்.