திருப்பாவை பாசுரம் 22 .. "அங்கண் மாஞாலத் தரசர் அபிமான"

Aadmika
Jan 07, 2024,09:16 AM IST

திருப்பாவை பாசுரம் 22 :


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணி ரண்டும் கொண்டு எங்கம்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.  




பொருள் :


தாங்களே பெரிய வீரர்கள் என பெருமை பேசும் இந்த உலகத்தில் உள்ள அரசர்கள் அனைவரும், உன்னை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து இங்கு வந்து, நீ சயனித்திருக்கிற கட்டிலின் கீழே சற்சங்கம் கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் அடியார்களை போல காத்திருக்கிறார்கள். அதே போல் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கிடக்கிறோம். சிறிய மணி போன்று வாயை உடையவனே! தாமரை மலர் போல சிவந்த உன்னுடைய கண்களை மெல்ல திறந்து, உன்னுடைய அருட்பார்வையை எங்கள் மேல் செலுத்து. சந்திரனும், சூரியனும் ஒரே நேரத்தில் தோன்றியது போல் ஒளி வீசும் உன்னுடைய இரு கண்களை வைத்து எங்களை கொஞ்சம் பார். அப்படி நீ தரும் சிறிய பார்வையால் எங்களுடைய சாபங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அதனால் இன்னும் எங்களைக் காக்க வைக்காமல் நீ உடனடியாக எழுந்து கொள்.


விளக்கம் : 


கண்ணனின் முக அழகை வர்ணித்து பாடும் ஆண்டாள், திருமாலின் கடைக்கண் பார்வை பட்டு விடாதா என் உலகத்தில் உள்ள அனைவரும் ஏந்தி காத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆண்டாள், கண்ணனை குழந்தையாக நினைத்து அன்பு செய்வதால், கண்களை திறப்பு கூட மெதுவாக சிறிது சிறிதாக திறக்கும் படி கேட்கிறார். சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றிவதை போல  என ஆண்டாள் ஒரு வரியை குறிப்பிட்டுள்ளார். இதை இரண்டு விதமாக பொருள் கொள்ள முடியும். ஒன்று, சூரியன் - சந்திரன் இணைந்து வந்தது போல் கண்ணனின் முகம் ஒளிமயமாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். மற்றொன்று,சூரியன் - சந்திரன் நேராக சந்தித்து கொள்ளும் நாளே அமாவாசை ஆகும். இது கண்ணனின் கருமை நிறத்தை குறிப்பதற்காகவும், அமாவாசை போன்ற இருளை நீக்கக் கூடியவனே என குறிப்பிடும் வகையிலும் ஆண்டாள் இந்த பாடலை அமைத்துள்ளார்.