ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 - முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

Aadmika
Jan 05, 2024,09:49 AM IST

திருப்பாவை பாசுரம் 20 :


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்




பொருள் :


தன்னை வேண்டும் பக்தர்களுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் சென்று அருள் செய்வதற்கு முன் சென்று அருளை வழங்கி, கலியுகத்தில் தவிக்கும் மக்களின் துயரங்களை போக்குபவனே எழுந்திரு. உன்னை எதிர்க்கின்ற பகைவர்களுக்கு பயத்தை கொடுத்து, நடுநடுங்க வைக்கக் கூடியவனே தூக்கத்தில் இருந்து எழுந்திரு. சிறு வாயினையும், மெலிந்த அழகிய கொடி போன்ற இடையையும் உடைய நப்பின்னாய் என்ற பெண்ணே, மகாலட்சுமியின் மறு அம்சமாக விளங்குபவளே எழுந்திரு. உன்னுடைய மார்பில் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னுடைய கணவனை தயவு செய்து எங்களுக்காக எழுப்பு. இப்போதே அவனை எங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். எங்களைப் போன்று காத்திருக்கும் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக கண்ணனை எங்களுடன் அனுப்பி வைத்து, நீங்களுக்கு அருள் செய்ய வேண்டும். அதோடு விசிறியும், கண்ணாடியும் நீயே எங்களுக்கு அளித்து ஆசி வழங்க வேண்டும்.


விளக்கம் :


கண்ணன், தன்னுடைய பக்தர்களை எப்படி எல்லாம் சென்று காப்பான் என கண்ணனின் கருணையையும், நப்பின்னையின் அழகையும் இந்த பாடலில் மிக அழகாக கூறி உள்ளார் ஆண்டாள் நாச்சியார். அதோடு கண்ணன் யாருக்கும் சொந்தம் கிடையாது. அவன், உண்மையான பக்தி செலுத்தும் அடியாளர்கள் அனைவருக்கும் சொந்தம் என்பதையும் இந்த பாடலில் ஆண்டாள் விளக்கி உள்ளார். இந்த பாடலில் விசிறி மற்றும் கண்ணாடியை ஆண்டாள் குறிப்பிடுவதற்கு காரணம், விசிறி போல் அனைவருக்கும் பயனுள்ளவர்களாக வாழ்வதே உண்மையான பக்தியாகும். கண்ணாடி என்பது தனக்கு எதிரில் இருக்கும் பிம்பத்தில் உருவ அமைப்பை உள்ளதை உள்ளபடி காட்டக் கூடியதாகும். அது யாருக்காகவும் பாரபட்சம் காட்டாது. அது போல் தான் யார் மீதும் விறுப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன் என குறிப்பிட்டுள்ளார்.