ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

Aadmika
Jan 04, 2024,07:53 AM IST

திருப்பாவை பாசுரம் 19 :


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.




பொருள் :


குத்து விளக்குகள் சுடர்விட்டு எரிய, யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விலை உயர்ந்த கட்டிலின் மேல் போடப்பட்ட, மிருதுவான சொகுசான பஞ்சு மெத்தை மேல், அடர்ந்த கூந்தலில் பூச்சூடி படுத்திருக்கும் நப்பின்னாயின் மார்பில் தலைவைத்து கண்மூடி படுத்திருக்கும் மலர் மாலைகளை அணிந்திருக்கும் கண்ணனே! வாய் திறந்து எங்களுடன் பேசு. மை பூசிய அழகிய கண்களை உடைய நப்பின்னையே, நீ உன்னுடைய கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரம் ஆனாலும் எழுப்புவது கிடையாது. அவனை கண் இமைக்கும் நேரம் கூட பிரிந்திருக்க நீ விரும்ப மாட்டாய் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் கண்ணனின் அருளை பெருவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது கருணை காட்டி, கண்ணனை எழுப்பி எங்களுக்கு உதவி செய்.  இப்படி அவனை எழுப்பாமல் இருப்பது உன்னுடைய நல்ல குணத்திற்கு ஏற்றது கிடையாது.


விளக்கம் :


பெருமாளின் அருளை பெற வேண்டும் என்றால் முதலில் தாயாரின் கருணையை நாம் பெற வேண்டும். தாயாரின் சிபாரிசு இருந்தால் பெருமாள் உடனடியாக நமக்கு அருளை தந்து விடுவார் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் குறிப்பிடுகிறார். அனைத்தும் அறிந்தவனாக இருந்தாலும், ஏதும் அறியாதவன் போல் கள்ளத்தனமாக தனது மனைவியின் மார்பின் மீது உறங்குவதைப் போல் தலைவைத்து படுத்தபடி கண்ணன் தங்களிடம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பதாக கண்ணனை குறும்புத்தனமான லீலைகளையும், செல்ல விளையாட்டுக்களையும், நப்பின்னை தனது கணவன் கண்ணன் மீது கொண்ட பாசத்தையும் இந்த பாடலில் ஆண்டாள் நாச்சியார் எடுத்து கூறுகிறார்.