ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 : உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

Aadmika
Jan 03, 2024,08:34 AM IST

திருப்பாவை பாசுரம் 18 :


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய் !

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


மதம்பிடித்த பலவிதமான யானைகளை அடக்கக் கூடிய தோள் வலிமைமிக்க நந்தகோபாலனின் மருமகளான நப்பின்னாய் எழுந்திருங்கள். பூக்களின் வாசம் மிகுந்த கூந்தலை உடைய பெண்ணே, உங்களின் கதவை திறங்கள். கோழி இனங்கள் கூவுவதற்கு தயாரி விட்டன. வந்து பாருங்கள். மாதவியின் வீட்டின் முன் அழகாய் படர்ந்தது இருந்தது போல் இங்கும் பந்தல் மேல் படர்ந்திருக்கும் மல்லிகை பந்தல் மீது குயிலினங்களக கூவத் துவங்கி விட்டதை பாருங்கள். உன்னுடைய கணவரின் புகழை பாடி, பணிவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். சிவந்த தாமரை போன்ற கைகளை உடைய நப்பினாய், உனது கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி எழுப்பும் படி வந்து கதவை திறங்கள். நாங்கள் கண்ணனின் புகழை பாடி துதித்து, அவரின் அருளை பெற வந்திருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் தான் கண்ணனை எழுப்பி எங்களின் விரதம் பூர்த்தி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும்.


விளக்கம் : 


பிள்ளைகள் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் முதலில் தாயிடம் தான் சென்று சொல்வார்கள். தாய் மூலமாக தான் அந்த விஷயம் தந்தையின் காதுகளுக்கு போய், பிறகு தான் நாம் விரும்பியது கிடைக்கும்.  அது போல் பெருமாள் கோவில்களில் முதலில் வாசலில் இருக்கும் கொடி மரம், கருடாழ்வார் ஆகியவற்றை வணங்கி விட்டு, நேராக தாயார் சன்னதிக்கு சென்று வணங்கிய பிறகு தான் பெருமாளை சென்று தரிசிக்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளது. இந்த முறையை மனதில் கொண்டே முதலில் வாசலில் இருந்த காவலரை எழுப்பி,கண்ணனின் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் எழுப்பிய ஆண்டாள். நேராக சென்று கண்ணனை எழுப்பாமல், அவரது மனைவியாகிய நப்பின்னாய்யை எழுப்பி, அவரது உதவியுடன் கண்ணனை எழுப்ப முயற்சி செய்கிறாள்.