ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 13 .. "புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளி"

Aadmika
Dec 29, 2023,10:19 AM IST

 திருப்பாவை பாசுரம் 13 :



புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்.



பொருள் :

பறவை வடிவம் எடுத்து வந்த பகாசுரன் என்று அசுரனின் வாயை பிளந்து கொன்றவனும், அடுத்தவரின் மனைவி என்றும் பாராமல் சீதா தேவியை சிறை எடுத்துச் சென்ற ராவணனின் பத்து தலைகளை கொய்வதற்காகவும் அவதாரங்கள் எடுத்த நாராயணனின் புகழை பாடியபடி தோழிர்கள் அனைவரும் கண்ணனை தரிசிக்க சென்று விட்டனர். கீழ்வானத்தில் விடியலைச் சொல்லும் வெள்ளி முளைத்து விட்டது. நிலவு தூங்க சென்று விட்டது.  பறவைகள் கீச்சிட்டு கத்த துவங்கி விட்டன. தாமரை போன்ற கண்களை உடைய பெண்ணே! விடியற் வருவதற்கான அறிகுறிகள் தோன்றிய பிறகும் குளிரில் உடல் நடுங்கும் என பயந்து, இப்படி நீராட வராமல் இருக்கலாமா? கண்ணனை நினைப்பதற்கான நேரத்தை இந்த தூக்கம் திருடிச் சென்று கொண்டிருக்கிறது. அதை அனுமதிக்காமல், எழுந்து எங்களுடன் நீராட வா பெண்ணே.

விளக்கம் :

நமக்கு இறைவன் கொடுத்துள்ள பொழுது என்பது அவனை நினைத்து, அவனது புகழை பாடுவதற்காக தான். ஆனால் நம்மையும் அறியாமல் பல விஷயங்கள் அந்த நல்ல பொழுதினை நமக்கே தெரியாமல் நம்மிடம் இருந்து திருடிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. இதை உணராமல் நாமும் நேரம் இல்லை என புலம்பிக் கொண்டிருக்கிறோம். உலகில் உள்ள மற்ற அனைத்து உயிர்களும் அதிகாலையில் எழுந்து, தங்களின் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி, தூங்கிக் கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என ஆண்டாள் நாச்சியார் அதிகாலையில் எழுவதன் அவசியத்தை குறிப்பிடுகிறார்.ய்தி விளக்கத்தை உள்ளிடவும்