ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 11.. " கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து"

Aadmika
Dec 27, 2023,08:28 AM IST

ஆண்டாள் தனது திருப்பாவை பாடல்களின் முதல் 10 பாடல்களில் கண்ணனின் பெருமைகளையும், அவரை பக்தி செய்ய வேண்டும் என உலக உயிர்களையும் அழைப்பது போன்று அமைத்திருந்தார். ஆனால் இன்றைய 11வது நாள் பாடலில் கண்ணனின் தர்ம சிந்தனையும், பெண்கள் கடைபிடிக்க வேண்டிய குணங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்.




திருப்பாவை பாசரம் 11 :


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

செற்றார் திறவழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


பொருள் :


கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசு மாடுகள் பலவற்றிலும் பால் கறக்கும் தொழில் திறம் தெரிந்தவன் மட்டுமல்ல, எப்படிப்பட்ட பகைவர்களாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவன் நம்முடைய தலைவனாகிய கண்ணன். அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்ணே, புற்றில் இருக்கும் பாம்பினை போல் மெல்லிய உடலையும், மயிலின் தோகை போன்ற அழகையும் கொண்டவளே ஒரு குற்றமும் செய்யாத மிகப் பெரிய தலைவனாக இருக்கக் கூடியவரின் மகள் நீ. நீ இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் தவறை செய்யலாமா? சுற்றி உள்ள தோழியர்கள் அனைவரும் உன்னுடைய வீட்டின் வாசலில் வந்து நின்று, மழை பொழியும் கருமையான மேகத்தை போன்று, பக்தர்கள் கேட்டதும் அருளை வழங்குவதற்கு தயாராக இருக்கும் கண்ணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் செல்வசெழிப்பையும், பெருமைகளையும் காத்து போற்றக் கூடிய பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா செல்ல பெண்ணே. எழுந்து வந்து எங்களுடன் கண்ணனின் புகழை நீயும் பாடு.


விளக்கம் :


கன்றுக்குட்டியுடன் இருக்கும் பசுவில் தான் பால் கறக்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு கற்றுத் தந்த தர்ம நெறி. பசு மாடு பால் சுரப்பது கன்றுக்குட்டிக்காக தான். நமக்காக அல்ல. ஆனால் நாம் பால் கறப்பதற்காக கன்றுக்குட்டியை காட்டி பசுவினை ஏமாற்றி, பால் கறக்கிறோம். இது மிகப் பெரிய பாவம். இந்த பாவத்தை செய்யாமல் தர்மத்தின் வழியில் இருப்பவன் கண்ணன் என்பதை எடுத்துச் சொல்லும் ஆண்டாள், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பெண்களை வீட்டின் மகாலட்சுமி என்பார்கள். அவர்கள் சுறுசுறுப்புடன் இயங்கினால் மட்டுமே அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். அதனால் ஒரு வீட்டின் பெருமையும், செல்வ நலனும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களிடம் தான் உள்ளது என்பதையும் உணர்த்துகிறார்.