ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 07 - கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து!

Aadmika
Dec 23, 2023,09:21 AM IST

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாராக விளங்கியவர் ஆண்டாள். ஆழ்வாராகவும், மகாலட்சுமியின் மறு அவதாரமாகவும் ஆண்டாள் வணங்கப்படுகிறார். பன்னிரு ஆழ்வார்களும் பெருமாளை புகழ்ந்து எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனையே கணவனாக அடைய வேண்டும் என்பதற்காக மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருப்பு, ஆண்டாள் பாடிய 30 பாசுரங்களே திருப்பாவை பாசுரங்கள் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றன. தமிழில் இயற்றப்பட்ட இந்த 30 பாடல்களைக் கேட்டே உலகம் முழுவதிலும் உள்ள வைணவ தலங்களில் திருமால் துயில் எழுகிறார்.  




திருப்பாவை பாசுரம் 07 :


கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


அழகிய பெண்ணே, கீச்சு கீச்சு என்று பறவைகளும், வண்டுகளும் சத்தமிடுவது உன் காதில் விழவில்லையா? அழகிய கருமையான நீண்ட கூந்தலை உடைய நம்முடைய ஆயர் குலப் பெண்கள் மத்தினால் தயிர் கடையும் சத்தம் கூட உனக்கு கேட்கவில்லையா? அவர்கள் மத்தினால் தயிரை கடையும் போது கையில் போடப்பட்டிருக்கும் வளையல்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மணிகளும், தாலியில் அணிந்திருக்கும் காசுகளும் அசைந்து ஒலிப்பு எழுப்புவதும் கூட உன் காதில் விழவில்லையா? நம்முடைய தலைவனான நாராயண மூர்த்தியை, கேசவனை பல விதமான நாமங்களை சொல்லி நாங்கள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டும் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா? தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து, உன்னுடைய வீட்டின் கதவை திற.


விளக்கம் :


அதிகாலையிலேயே ஆயர்குலத்தில் என்னென்ன வேலைகள் நடக்கும், எப்படிப்பட்ட சூழல் இருக்கும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லி இந்த பாடலை துவங்குவார் ஆண்டாள் நாச்சியார். ஆயர் குலப் பெண்கள் அணிந்திருக்கும் அணிகலன்களையும், அவர்களின் அழகையும், சுறுசுறுப்பையும் எடுத்துக் கூறும் ஆண்டாள். பெருமாலின் நாமங்களில் மிக புனிதமான நாமமாக சொல்லப்படும் நாராயணன், கேசவன் ஆகிய நாமங்களையும் குறிப்பிட்டுள்ளார். திருப்பாவை பாடல்களே கேசவா என்ற நாமத்தை போற்று புகழ்வதை குறிப்பது தான் என்றும் சொல்லப்படுவது உண்டு.