ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 05 - மாயனை மன்னு வடமதுரை மைந்தனை!

Aadmika
Dec 21, 2023,08:37 AM IST

பெருமாளின் புண்ணியம் தரும் திருநாமங்களை போற்றும் விதமாகவும், இறைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் உலகத்தவர்கள் புரிந்து கொள்வதற்காக, அவர்களின் அறியாமையை போக்கி, மாயையில் இருந்து விடுவிப்பதற்காகவும் ஆண்டாள் பாடிய 30 பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் தினமும் இந்த 30 பாடல்களையும் படிப்பவர்களுக்கு அனைத்து விதமான நலன்களும் ஏற்படும்.




திருப்பாவை பாசுரம் 05 :


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


மாய வேலைகள் செய்பவனும், வடக்கில் இருக்கும் மதுரா நகரத்தில் பிறந்தவனும், தூய்மையாக பெருக்கெடுத்து ஓடும் யமுனை நதிக்கரை வளர்ந்தனும், ஆயர் குலத்தில் ஒளி ஏற்ற வந்த விளக்கை போல் தோன்றியவன் நம்முடைய கண்ணன். ஆனால் தாய் யசோதைக்கு மட்டும் கட்டுப்பட்டு இருக்கும் தாமோதரன் நாம் தூய மலர்கள் கொண்டு பூஜை செய்தும், தேடிச் சென்று வணங்கி, வாயினால் பாடி, மனத்தால் சிந்தித்தும் இருந்தால் நாம் இந்த பிறவியில் மட்டுமல்ல இதற்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த அத்தனை தவறுகளும் தீயின் மீது பறக்கும் தூசி, துகள்களைப் போய் எரிந்து சாம்பலாகி விடும். கண்ணன் மாய வேலைகள் செய்து, குறும்பு செய்து விளையாடும் சிறு பிள்ளை தானே என சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். இந்த உலகையே காக்கும் தலைவன் அவன்.


விளக்கம் :


இந்த பிறவி எடுத்திருப்பதே இறைவனை வாயால் பாடி, மனத்தால் நினைத்து, எப்போதும் பக்தி செய்து இருக்கத் தான். துன்பம் வரும் போதும் தான் நாம் இறைவனை நினைக்கிறோம். ஆனாலும் ஓரிரு நாட்கள் கோவிலுக்கு சென்று விட்டு தன்னுடைய கஷ்டங்கள் தீரவில்லை, தான் நினைத்தது நடக்கவில்லை என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி இறைவனை வணங்காமல் இருந்து விடுகிறோம். ஆனால் இறைவன் கொடுக்கும் துன்பங்கள் அனைத்தும் நம்மை பக்குவப்படுத்தி, நம்முடைய கர்மாக்களை அழிக்கத்தான். அதை புரிந்து கொண்டால் இ்றைவன் நம்மை காக்க எப்போதும் தவறுவது இல்லை என்பதை இப்பாடலில் விளக்குகிறார் ஆண்டாள்.