மார்கழி 30 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 30 : வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 30 :
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள் :
அலைகள் நிறைந்த பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது கூர்ம அவதாரம் எடுத்து, மேரு மலையை தன்னுடைய முகுகில் தாங்கியவனே! மாதவனும், கேசவனுமான கண்ணனை, சந்திரனை போன்ற அழகு நிறைந்த முகம் கொண்ட அணிகலன்கள் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசிக்க வந்துள்ளோம். பாவை விரதம் கடைபிடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தை உடைய பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல்களாக பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இந்த பாடல்களை படிப்பவர்கள், உயர்ந்த வலிமையான தோள்களை உடையவவும். அழகிய கண்களை கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்திற்கு அதிபதியும் ஆன திருமாலே உன்னுடைய அருளை பெற்று, எங்கு சென்றாலும் செல்வ செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்