மார்கழி 27 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 27 : கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 27 :
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
பொல்லாத எதிரிகளை எதிர்த்து வெற்றி கொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்கள் வந்துள்ளோம். அருட்செல்வத்துடன் இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட் செல்வங்களையும் எங்களுக்க தந்து அருள வேண்டும். அந்த பொருள் செல்வம் இருந்தால் தான் உலக மதிப்புக்களை பெற முடியும். இத்தனை நாட்கள் பாவை நோன்பு கடைபிடித்ததால் அணியாமல் இருந்த கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹூவலயம், காதில் அணியும் கம்மல், காலில் அணியும் பாடகம் போன்ற அணிகலன்களை விரதத்தை நிறைவு செய்த பிறகு அணிந்து கொள்ள போகிறோம். அதற்கு பிறகு பால் சோறுடன் நெய் சேர்த்து, அந்த நெய் முழங்கை வரை வழிந்த ஓடும் அளவிற்கு வயிறாற உணவு உண்டு மகிழ்வோம்.
மார்கழி மாதத்தின் 27ம் நாளில் கூடாரவல்லி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பெருமாளுக்கு மிகவும் விருப்பமான அக்காரஅடிசல் நைவேத்தியமாக படைக்கப்படும். இதனையே தன்னுடைய 27ம் நாள் பாடலில் குறிப்பிட்டுள்ளார் ஆண்டாள். மார்கழி மாதம் நிறைவடைய போவதை முன்கூட்டியே அனைவருக்கும் எடுத்துரைப்பதாக இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்