"இந்தாங்க  எலக்ட்ரிக் கார்".. பிரக்ஞானந்தாவுக்கு வழங்கிய ஆனந்த் மஹிந்திரா.. வெள்ளி வென்றதற்காக!

Meenakshi
Mar 12, 2024,04:22 PM IST

சென்னை: உலகப் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எஸ்.யூ.வி கார் பரிசாக வழங்கியுள்ளார் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.


உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு அடுத்து இந்தியாவின் நம்பர் 1 செஸ்  வீரராக  பிரக்ஞானந்தா புதிய உச்சம் தொட்டுள்ளார். நெதர்லாந்தில் நடந்த டாடா ஸ்டீம் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில், உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி சாதனை படைத்ததன் மூலம் இந்த புதிய உச்சத்தைத் தொட்டார் பிரக்ஞானந்தா. 




இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை  பிரக்ஞானந்தா பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் எடுத்து விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். 


முன்னதாக  அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிரண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்லசெனிடம் தோல்வி அடைந்ததினால் வெள்ளி பதக்கம் வென்றா். இதைப் பாராட்டும் விதமாக பிரக்ஞானந்தாவுக்கு எக்ஸ்யூவி 400 கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார். 


இதுதொடர்பாக போட்டிருந்த டிவீட்டில் , பிரக்ஞானந்தா கனவிற்கு பக்கபலமாக இருந்த அவரின் தாய் நாகலட்சுமி, தந்தை ரமேஷ் பாபு ஆகியோருக்கு தனது நன்றிகளை சொல்லும் வகையில் எக்ஸ்யூவி மின்சார காரை பரிசாக வழங்க தான் எண்ணுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது காரை வழங்கி விட்டார் ஆனந்த் மஹிந்திரா.  தனது தாய், தந்தை, அக்காவுடன் வந்து காரை பெற்றுக்கொண்டதுடன், ஆனந்த் மஹிந்திராவுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார் பிரக்ஞானந்தா.